Home நாடு அஸ்மின் அலி தலைமையில் சிலாங்கூர் ஆட்சி நிலையாக இருக்கும் – அரசியல் ஆய்வாளர்கள்

அஸ்மின் அலி தலைமையில் சிலாங்கூர் ஆட்சி நிலையாக இருக்கும் – அரசியல் ஆய்வாளர்கள்

544
0
SHARE
Ad

Azmin Aliஜோகூர், ஜூலை 2 – அரசியல் கூட்டணி என்ற வகையில் பக்காத்தானில் தற்போது நிலையற்ற தன்மை காணப்படும் போதிலும், அஸ்மின் அலி தலைமையில் சிலாங்கூர் ஆட்சி நிலையாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜசெக மற்றும் பாஸ் கட்சிகள் சிலாங்கூர் மந்திரி பெசாருடன் இணைந்து செயல்பட முடியாது என அறிவிக்கும் பட்சத்திலேயே சிலாங்கூர் தலைமைத்துவத்திற்கு நெருக்கடி ஏற்படும் என ஆய்வாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.

“இரு கட்சிகளுமே அஸ்மின் அலிக்கான தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளனர். எனவே சிலாங்கூர் அரசு நீடிக்க வேண்டும் என்பதை இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது,” என்று சிலாங்கூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஷஹாருடின் கூறுகிறார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜசெக அறிவித்துள்ள போதிலும் சிலாங்கூர் அரசு, கூட்டணி அரசாகத் தொடர்ந்து செயல்பட முடியும் என்று ஷஹாருடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அஸ்மின் அலி கூட்டும் கூட்டத்தை மாநில எக்சோ உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு செய்தால் மட்டுமே தலைமைத்துவ நெருக்கடி ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய ஒரு சிக்கல் மாநில அரசுக்கு இருப்பதாக நான் கருதவில்லை,” என்கிறார் ஷஹாருடின்.

மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நிக் அகமட், பாஸ் மற்றும் ஜசெக ஆகிய இரு கட்சிகளும் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“சிலாங்கூர் மாநிலத்தில் எத்தகைய நெருக்கடியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அங்குள்ள நிலைமை குறித்து ஹரிராயாவுக்குப் பின் ஆலோசனை நடத்த இரு தரப்புமே ஒருவருக்கொருவர் அவகாசம் வழங்கியுள்ளனர்,” என்று நிக் அகமட் தெரிவித்துள்ளார்.