Home நாடு காவல்துறையிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் ‘த எட்ஜ்’ தலைமைச் செயல் அதிகாரி

காவல்துறையிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் ‘த எட்ஜ்’ தலைமைச் செயல் அதிகாரி

530
0
SHARE
Ad

Ho Kay Tatகோலாலம்பூர், ஜூலை 22 – 1எம்டிபி நிறுவனம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தது குறித்து ‘த எட்ஜ்’ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ கே டாட் (படம்) காவல்துறையிடம் தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.

தங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களும் வணிகக் குற்ற விசாரணை பிரிவு மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவும் பொருட்டு பேங்க் நேகராவிடம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையிடம் தமது வாக்குமூலத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 1எம்டிபி மற்றும் பெட்ரோ சவுதி நிறுவனத்துக்கு இடையேயான கூட்டு ஒப்பந்தம் (joint-venture) தொடர்பிலான ஆவணங்களை இந்தாண்டு தொடக்கத்தில் குறிப்பிட்ட நபர் தங்களிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆனால் அந்த நபர் தாய்லாந்து காவல்துறையால் கைது செய்யப்பட்ட சேவியர் ஜஸ்டோவா என்பதை ஹோ கே டாட் உறுதி செய்யவில்லை.
“அந்த நபர் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களை எங்களிடம் காட்டினார். தகவல் தொழில்நுட்ப வல்லுநரைக் கொண்டு ஆராய்ந்ததில் அவற்றில் எதுவுமே போலியானவை அல்ல என்பதை உறுதி செய்து கொண்டோம். அவற்றில் இருந்த தகவல்கள் எங்களை அதிர்ச்சியடைய வைத்தன.”

“நாட்டிற்கு பொருளாதார ஆதாயங்களைப் பெற்றுத்தரும் என்று கூறப்பட்ட அந்தக் கூட்டு முயற்சியானது, மலேசியாவில் இருந்து பல பில்லியன் ரிங்கிட் பணத்தை சுருட்ட, மலேசியர்களைக் கொண்ட சிறு குழுவொன்று தனது வெளிநாட்டுக் கூட்டாளிகளுடன் மேற்கொண்ட முயற்சி எனத் தெரியவந்தது.”

“இந்த விவகாரத்தை நாங்கள் அப்படியே விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் உண்மையைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டிய சமூகக் கடமையுடன் செயல்பட்டோம். மற்றபடி இதில் வேறு எந்தவித தீய நோக்கமும் இல்லை,” என்று ஹோ மேலும் தெரிவித்தார்.