Home உலகம் ராஜபக்சே ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி பறிப்பு: சிறிசேனா அதிரடி!

ராஜபக்சே ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி பறிப்பு: சிறிசேனா அதிரடி!

726
0
SHARE
Ad

Maithri-vs-mahindaகொழும்பு, ஆகஸ்ட் 19- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 25 பேரின் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்நாட்டுப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளார்.

அதிபர் பதவியையும் அதேசமயம் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியையும் பறி கொடுத்த ராஜபக்சே, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு, தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட அதிபர் சிறிசேனாவிடம் அனுமதி கேட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால் அவர் அனுமதி தர மறுத்துவிட்டார். அதன்பின்பு, சுதந்திரக் கட்சியிலுள்ள ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வற்புறுத்தியதன் பேரில் அரைமனதோடு சம்மதித்தார்.

எனினும், பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றாலும், ராஜபக்சேவைப் பிரதமராக்க முடியாது என அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதே சமயம் அவரது ஆதரவாளர்கள் பதவி விலகுவோம் என மிரட்டியதால் தான் ராஜபக்சே தேர்தலில் போட்டியிட அனுமதித்தேன் என்றும் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜபக்சே இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, இலங்கை சுதந்திரா கட்சியில் தலைவராக உள்ள சிறிசேனா, கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் 25 பேரின் பதவியை அதிரடியாகப் பறித்து அனுப்பி விட்டார்.