Home உலகம் பலரின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய ஆஷ்லே மேடிசன் வலைத்தளம்!

பலரின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய ஆஷ்லே மேடிசன் வலைத்தளம்!

614
0
SHARE
Ad

suicide10ஒட்டாவா – சமுதாயத்தில் சிறந்த தம்பதியாய் இருவர் மதிக்கப்படுகின்றனர். இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கிறது. அன்பு நிறைந்து இருக்கிறது. திடீரென ஒருநாள், ஒரு பிரபல வலைத்தளம் ஒன்று ஹேக் செய்யப்படுகிறது. அந்த வலைத்தளத்தின் முக்கியப் பணியே, பணம் பெற்றுக் கொண்டு தகாத உறவை வளர்ப்பது தான். ஹேக் செய்யப்பட்ட அந்த வலைத்தளத்தின் தகவல்கள், இணையத்தில் வெளியிடப்படுகிறது. அதில் அந்த தம்பதியின் கணவன் பெயரோ அல்லது மனைவி பெயரோ இருந்தால் எத்தகைய அதிர்ச்சியை ஏற்படுத்தும். அது தான் தற்போது நடந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அந்த வலைத்தளம் தான் ஆஷ்லே மேடிசன்(Ashley Madison). கனடாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட அந்த வலைத்தளத்தில், 53 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 40 மில்லியன் பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்த வலைத்தளத்தின் முக்கிய முழக்கமே, “வாழ்க்கை மிகவும் சிறியது. அதனால் திருமணம் தாண்டிய உறவை வளர்த்துக் கொள்” என்பது தான்.

இப்படி ஒரு தளத்திற்கு ஏன் அனுமதி கொடுத்தார்கள்? ஏன் தவறு செய்து விட்டு அவதிப்பட வேண்டும்? என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி, தற்போது, இந்த வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டதால், பலர் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளத் துவங்கி உள்ளனர் என்பது தான் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே கனடாவைச் சேர்ந்த இருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த பட்டியலில் கடந்த 6 நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கிப்சன்(படம்) என்ற மதப் போதகரும் இணைந்துள்ளார்.

மனைவி, இளம் வயது மகன் மற்றும் மகள் என சந்தோஷம் நிலைத்து இருந்த கிப்சன் குடும்பம், அவரின் பெயர் வலைத்தளத்தில் வெளியானது முதல் கடுமையான மன உளைச்சலில் தவித்து வந்துள்ளது. குடும்பத்தில் மட்டுமல்ல பணியிலும் தனது நம்பகத்தன்மையை கேள்விக்குறியானதால், கிப்சன் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இரகசியத்தை காப்பாற்றுவோம் என உறுதியளித்த வலைத்தளம் தற்போது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருவதால், கடுமையான சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. அதேபோல், இந்த வலைத்தளத்தில் தொடர்பில் இருந்த உறுப்பினர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

அது சரி, இது போன்ற வலைத்தளங்கள் ஆசியர்களை பாதிக்காது என ஆறுதல் அடைய முடியவில்லை. ஆசியர்களில், குறிப்பாக இந்தியர்கள் இந்த வலைத்தளத்தில் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மற்றொரு அதிர்ச்சியான ஒன்று என்னெவென்றால், இந்தியளவில் சென்னைவாசிகள் தான் மூன்றாவது அதிகபட்ச உறுப்பினர்களாக உள்ளனர் என்பது தான்.

– சுரேஷ்