Home இந்தியா இலங்கை விவகாரம்! தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் வலுக்கிறது!

இலங்கை விவகாரம்! தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் வலுக்கிறது!

475
0
SHARE
Ad

Rajapakse-Sliderஇலங்கை, மார்ச்,12- இலங்கை விவகாரம் தொடர்பில் சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் நடத்திய மாணவர்களை காவல் துறையினர் கைது செய்து பலவந்தமாக மருத்துவதனைகளில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கைதான லயோலா கல்லூரியின் மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையையும் நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கல்லூரி மாணவர்கள் இலங்கை விவகாரத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் உளவியல், தொடர்பியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பல்கலைக்கழக வளாகம் முன் உண்ணாவிரதம் தொடங்கினர்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

மதுரை: மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மண்டல வணிகவரித்துறை அலுவலக வளாகத்தின் முதல் மாடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்களில் சிலர் வங்கிக்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வங்கியின் கதவுகளை இழுத்து மூடி வங்கி ஊழியர்களை சிறைவைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற் கும் மேலாக இந்த போராட்டம் நடந்ததால் வங்கிக்குள் இருந்த பொதுமக்களும், வங்கி ஊழியர்களும் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். இதன்பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, ஊர்வலமாக வந்து மாவட்ட நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் 12 மணி அளவில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். 6 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தை தொடக்கினர்.

கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டை சேர்ந்த 20 மாணவர்கள் நேற்று மாலை மதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழகம், புதுவையிலும் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதம், மறியல், ஊர்வலம் என்று போராட்டங்களை நடத்தினர்.