Home இந்தியா மே முதல் வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம்

மே முதல் வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம்

526
0
SHARE
Ad

Jayalalitha-Slider--1சென்னை, மார்ச்.13- காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை மே மாதம் முதல் வாரத்துக்குள் அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இறுதி தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி அமைப்பது தொடர்பாக கடந்த பிப்ரவரி 22ல் அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

#TamilSchoolmychoice

கோடை மாதங்களில் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி மற்றும் ஹரங்கி ஆகிய 4 நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பை கர்நாடக அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டு வருகிறது.

இந்த காலகட்டத்தில் நீர்தேக்கங்களுக்கு வரும் நீரை பயன்படுத்திக் கொண்டு வருகிறது. வழக்கமாக ஏப்ரல் 3-வது வாரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடங்கும்.

அதன் எதிரொலியாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு திறந்துவிட நீரை சேமித்து வைப்பதற்கு பதிலாக கடந்த காலங்களை போல இந்த நீரை கோடை பாசனத்துக்கு கர்நாடகம் பயன்படுத்தி வருகிறது.

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி ஜூன் 1ம் தேதி முதல் ஜனவரி 31 வரையிலான கால கட்டத்தை நீர்ப்பாசன காலமாக கர்நாடகா அனுசரிக்க வேண்டும். கோடை நீர்ப்பாசனத்துக்காக தனது அணைகளில் உள்ள நீரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

2013 மற்றும் 2014 நீர்ப்பாசன ஆண்டில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட 2013 மே முதல் வாரத்துக்குள் காவிரி நீர் கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எழுத்து பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.