Home Featured இந்தியா மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் பாடகருக்கு இந்தியக் குடியுரிமை!

மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் பாடகருக்கு இந்தியக் குடியுரிமை!

663
0
SHARE
Ad

Adnan-Sami-indian-pti.jpg.image.975.568புது டெல்லி – பாகிஸ்தான் பாடகர் அத்னன் சமிக்கு இந்தியா, மனித நேய அடிப்படையில் குடியுரிமை வழங்கி உள்ளது. இந்தியாவின் இந்த செயலால் நெகிழ்ந்து போன சமி, இந்தியா எனது மனப்பூர்வமான வீடு என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் வாசியான அத்னன் சமி, கடந்த 2001 மார்ச் மாதம் 13-ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்தார். இங்கு அவர் ஓராண்டு காலம் தங்க அனுமதிக்கப்பட்டது. ஓராண்டு முடியும் தருவாயில், சமிக்கு இந்தியாவை விட்டுப் போக மனம் வரவில்லை. இந்தியாவில் தான் தனது எதிர்காலம் என்று தீர்மானித்தார்.

எனினும் அதற்கு பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருந்து வந்தன. அதனைத் தொடர்ந்து அவர், இந்தியத் தூதரகம் மூலமாக இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இதனால் அவரது விசா தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையி்ல் தான், பாகிஸ்தான் அரசு சமியின் கடவுச்சீட்டைப் (Passport) புதுப்பிக்க மறுத்து விட்டது. இதனால் அவர், ஒருகட்டத்தில் பாகிஸ்தான் குடியுரிமையையும் விட்டு கொடுக்க நேர்ந்தது.

இப்படி இருக்கையில் சமி, கடந்த மே 26-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தி்டம் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மனித நேய அடிப்படையில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 6-ன் கீழ் சமிக்கு குடியுரிமை வழங்கப்படுவதாக இந்த அமைச்சக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் அது நேற்று முதல் நடைமுறைக்கும் வந்தது.

புத்தாண்டில் இந்தியக் குடியுரிமை பெற்ற சமி, மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர், “இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாத ஒரு உணர்வை நான் உணர்ந்ததே இல்லை. அப்படி, சகிப்புத்தன்மை இல்லையென்றால் நான் இந்திய குடியுரிமையைப் பெற்றிருக்க முடியாது. அமீர்கான், ஷாருக்கான் போன்ற நடிகர்கள் சகிப்புதன்மை குறைந்திருப்பதாகக் கருத்துக்களை தெரிவித்திருப்பது ஒருவேளை அவர்களது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வேண்டுமானால் இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.