Home Featured நாடு ரபிசி ரம்லிக்கு அபராதம் 1,800 மட்டுமே! நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்!

ரபிசி ரம்லிக்கு அபராதம் 1,800 மட்டுமே! நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்!

604
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான முகமட் ரபிசி ரம்லி (படம்), அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கும் விதத்திலும் நடந்து கொண்டார் என நேற்று தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) அவருக்கு 1,800 ரிங்கிட் அபராதம், அதனைச் செலுத்தத் தவறினால் 10 மாத சிறைத் தண்டனை விதித்தது.

இதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரபிசி நீதிமன்றத்தில் செலுத்தினார்.

rafizi-ramli4-june29சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ரபிசி இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2,000 ரிங்கிட்டுக்கும் கூடுதலான அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதன் காரணமாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இழந்திருப்பார் என்பதோடு, சிலாங்கூரிலுள்ள பாண்டான் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடத்தப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

வழக்கை விசாரித்த நீதிபதி அஸ்வார்னிடா அஃபாண்டி, அரசாங்கத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி தனது தரப்பு வழக்கை நிரூபித்துள்ளது எனத் தெரிவித்தார்.

39 வயதான ரபிசி வரைமுறைக்கு மீறிய அளவில் அம்னோவின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தரப்பு ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவதின் வழி, அண்மைய சில ஆண்டுகளில் மலேசியர்களிடையே மிகவும் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவராக ரபிசி ரம்லி திகழ்கின்றார்.