Home Featured நாடு நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!

நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!

571
0
SHARE
Ad

NAJIBகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பரிந்துரை செய்ததாக வெளியான செய்தியை சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி மறுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரைட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், சட்டவிரோதமாக பணத்தை கையாடல் செய்து விட்டதாகக் கூறி நஜிப் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்திருந்தது.

“இது ஒரு மிகவும் வெளிப்படையாக நடந்த விவகாரம். நடவடிக்கை எடுக்கும் படி சட்டத்துறைத் தலைவரிடம் பரிந்துரை செய்திருந்தோம். ஆனால் மாறாக அதை அவர் நிராகரித்துவிட்டார்” என்று எம்ஏசிசி-யைச் சேர்ந்த ஒருவர் ரைட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அச்செய்தியை மலேசியாகினியும் நேற்று வெளியிட்டிருந்தது. அதில் குற்றவியல் சட்டம் பிரிவு 403 -ன் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை நஜிப் மீது சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்திருந்தது.

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் அனுப்பிய 42 மில்லியன் ரிங்கிட்டின் பேரில் தான் இந்தக் குற்றச்சாட்டை எம்ஏசிசி பரிந்துரைத்ததாகக் கூறப்படுகின்றது.

கடந்த செவ்வாய்கிழமை சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி வெளியிட்ட அறிக்கையில், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து தனது வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டத்தை நஜிப் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், சட்டப்பிரிவு 403-ன் கீழ், “நேர்மையற்ற முறையில் சொத்துகளை கையாடல்” செய்ததாக நஜிப் மீது குற்றம் சுமத்த தக்க ஆதாரம் இருப்பதாக எம்ஏசிசி தெரிவித்திருக்கின்றது.

அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 6 மாதங்களுக்குக் குறைவில்லாத சிறை தண்டனையோ அல்லது 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க சட்டத்தில் இடமுள்ளதாகக் கூறப்படுகின்றது.

முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தற்போது நிதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. அதில் இருந்து வந்த நிதி, அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய நிதியைச் சேர்ந்தது (KWAP)  என்று விசாரணை அதிகாரிகள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளனர்.