Home Featured தமிழ் நாடு 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்

3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்

583
0
SHARE
Ad

tamilnaduசென்னை – மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக இறுதி வாக்காளர்கள் பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்கார்கள் இடம்பெற்றுள்ளதாக திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. குறிப்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஆளுங்கட்சியினரின் குறுக்கீடு காரணமாகவே ஏராளமான போலி வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகப் புகார் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து போலி வாக்காளர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, ஏற்கெனவே வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்து போனவர்களின் பெயர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருந்த பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

“ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டிருந்த பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் என இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார் 62 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே வாக்குச்சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும்” என்றும் ராஜேஷ் லக்கானி கூறினார்.

எனினும் எதிர்க்கட்சிகள் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாகப் புகார் எழுப்பியுள்ள நிலையில், அதில் பத்து விழுக்காடு போலிகள் கூட நீக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்குமா? என்பது தெரியவில்லை.