Home Featured நாடு ஜாகிர் நாயக் பற்றிய அவதூறு கருத்துக்களை நிறுத்துங்கள் – காலிட் எச்சரிக்கை!

ஜாகிர் நாயக் பற்றிய அவதூறு கருத்துக்களை நிறுத்துங்கள் – காலிட் எச்சரிக்கை!

483
0
SHARE
Ad

Zakir Naik-posterகோலாலம்பூர் – இஸ்லாமிய பண்டிதர் ஜாகிர் நாயிக்கிற்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

அது போன்ற அறிக்கைகள் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்பதால், அவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டாது என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

“மலேசியக் கூட்டரசின் அதிகாரப்பூர்வ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், சமூக உடன்பாடு மதிக்கப்படவேண்டும், அதேவேளையில், மற்ற சமயத்தினரின் உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், முன்னதாக தான் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது போல், அந்த கருத்தரங்கு இரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதையும் காலிட் மறு உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், இந்து சமயத்திற்கும், இஸ்லாமிற்கும் இடையிலான ஒற்றுமைகளைப் பற்றிய தலைப்பில், அப்பண்டிதர் பேசுகையில், ஒரு மதத்தின் பலவீனங்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்பதால் தான் அம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 17-ம் தேதி, மலாக்காவில் உள்ள மலேசியத் தொழில்நுட்ப மலாக்கா பல்கலைக்கழகத்தில், டாக்டர் ஜாகிர் நாயக் சொற்பொழிவாற்றவுள்ளார் என அறிவிப்புகள் அண்மையில் வெளியாகியிருந்தன.

அதனையடுத்து, மஇகா உட்பட மலேசியாவின் பல்வேறு இந்திய அமைப்புகள், இதற்கு முன்பு இந்து சமயத்திற்கு எதிராக ஜாகிர் பேசியுள்ள பல உரைகளைச் சுட்டிக் காட்டி, அவரது சொற்பொழிவைத் தடை செய்யும் படி காவல்துறையில் புகார் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.