Home Featured தமிழ் நாடு சுத்தமான ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சி கூடங்குளம் – மோடி உரை!

சுத்தமான ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சி கூடங்குளம் – மோடி உரை!

706
0
SHARE
Ad

Modiசென்னை – கடந்த 1988-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் உதவியுடன் அணு மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையின் அதன் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, முதல் அலகு முழு உற்பத்தியை எட்டியுள்ள நிலையில், அதனை இந்தியாவிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ரஷ்யாவில் இருந்தபடி அதிபர் புதின், டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி, சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஆகியோர் காணொளி வழியாக அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

#TamilSchoolmychoice

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முக்கியமான இணைப்பு கூடங்குளம் அணு உலை என்று குறிப்பிட்டார்.

இந்தியா-ரஷ்யா உறவின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், பசுமை வளர்ச்சிக்கான கூட்டு தடங்களை உருவாக்குவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பின் அடையாளமாக கூடங்குளம் திகழ்வதாகவும், ரஷ்யாவுடன் 12 ஆண்டு ஒத்துழைப்புடன் இந்தியா மேலும் பல அணுஉலைகளை நிறுவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், இது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் மிகப்பெரிய நிகழ்வு என்று தெரிவித்தார். கூடங்குளம் அணு உலையானது அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட ரஷ்ய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும் அணு மின் நிலையத்தில் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் நாட்டின் தொழில்நுட்பங்களை இந்திய வல்லுநர்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் புதின் கூறினார்.

முதலாவது அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதேபோல் முதல் மற்றும் 2-வது அணுஉலைகள் செயல்பாட்டுக்கு வரும் போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இதில் தமிழ்நாட்டுக்கு 925 மெகாவாட், கர்நாடகத்திற்கு 442 மெகாவாட், கேரளாவிற்கு 266 மெகாவாட், புதுச்சேரிக்கு 67 மெகாவாட், ஒதுக்கப்படாமல் 300 மெகாவாட் மின்சாரம் உள்ளது. இதில் முதல் அலகில் மட்டும் ஒதுக்கப்படாமல் உள்ள 150 மெகாவாட்டில் 100 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 50 மெகாவாட் மின்சாரம் ஆந்திராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட தகவலை எரிசக்தித்துறை அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.