Home Featured நாடு பதிப்பகம் மன்னிப்பு: செப்.30-க்குள் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க வேண்டுகோள்!

பதிப்பகம் மன்னிப்பு: செப்.30-க்குள் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க வேண்டுகோள்!

674
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழ் மொழி கிரேக்கம், போர்த்துகீசு, ஆங்கிலம் மற்றும் கிழக்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட சொற்களால் உருவானது என ஆக்ஸ்போர்டு ஃபாஜார் பதிப்பகத்தின், ‘பகாசா மலாயு எஸ்டிபிஎம் ஏஸ் எகெட்’ (Bahasa Malayu STPM Ace Ahead) பாடப் புத்தகத்தில், 97-வது பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், அதனையறிந்த மலேசிய இந்தியர்கள் பலர், அது குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.

tm-070916-13-new1அதனையறிந்த கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதன் உடனடியாக சம்பந்தப்பட்ட பதிப்பகத்தினை நேரில் சந்தித்து நிகழ்ந்துள்ள தவறு குறித்து விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அக்கருத்தைதை மீட்டுக் கொள்வதாக உறுதியளித்துள்ள அப்பதிப்பகம், தனது மன்னிப்பையும் கேட்டுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அப்பதிப்பகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “உலகளாவியப் பதிப்பகத்தின் ஒரு பகுதி என்ற வகையில், எங்கள் வெளியீடுகளில் சரியான தரமான தகவல்களை வழங்க வேண்டும் என்பதே எங்களின் தலையாய நோக்கம். அதேவேளையில், தவறு ஏற்படும் சூழலில், உடனடியாக மற்றும் முறையான நடவடிக்கை எடுப்பதற்கு, நாங்கள் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளோம். ஆசிரியர் பிரிவில் நேர்ந்த தவறின் காரணமாக ‘Ace Ahed Teks STPM Bahasa Melayu Penggal 1’ என்ற தலைப்பிலான புத்தகம், அத்தியாயம் 1 (பிரிவு 5-ல்) தவறு ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்தத் தவற்றின் காரணமாக மனம் புண்பட்டிருக்கும் இந்திய சமுதாயத்தினரிடம் நாங்கள் உள்ளப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் ” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அப்புத்தகத்தை வாங்கியவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், தமது பயனீட்டாளர் சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தைத் திரும்பக் கொடுத்து, அதற்கான பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்து வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் பெறலான் என்றும் அப்பதிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புக்கு: dcs@oxfordfajar.com.my அல்லது +603-5629 4000