Home Featured நாடு “ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா

“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா

691
0
SHARE
Ad

subramaniam-dr

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக் கருதக் கூடாது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தை வைத்து இரு கட்சிகளும் நெருக்கமாகி விட்டார்கள், இணையப் போகிறார்கள் என்று கூறுவது முறையல்ல என்றும் சுப்ரா தெளிவுபடுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

“மியன்மாரில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அல்லது அதுபோன்று மற்ற நாடுகளில் நடந்துவரும் சம்பவங்கள் மனிதாபிமான அடிப்படையில்தான் பார்க்கப்பட வேண்டுமே தவிர, மற்றபடி இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ பார்க்கப்படக் கூடாது” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

najib-hadi-rohingya-meet

ரோஹிங்கியா கண்டனப் பேரணியில் அருகருகே அமர்ந்திருந்த அம்னோ தலைவர் நஜிப்பும், பாஸ் தலைவர் ஹாடி அவாங்கும்…

ரோஹிங்கியா பிரச்சனையில் அந்த மக்களின் கண்ணோட்டத்தையே தேசிய முன்னணியும் தனது கண்ணோட்டமாகக் கொண்டுள்ளது என்றும் அதன் காரணமாக மத அடிப்படையில் அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான ஒத்துழைப்பாக ரோஹிங்கியா பிரச்சனை பார்க்கப்படக் கூடாது என்றும் சுப்ரா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் தித்திவாங்சா அரங்கில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள் தொடர்பில் இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்பட்ட கண்டனப் பேரணியில் அம்னோ, பாஸ் கட்சி உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்டனப் பேரணியில் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் துன் ரசாக்குடன், பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கும் கலந்து கொண்டார்.