Home Featured நாடு சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலுக்கு கரிகாற்சோழன் விருது

சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலுக்கு கரிகாற்சோழன் விருது

1329
0
SHARE
Ad

Seeni Naina Mohdகோலாலம்பூர் – தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் சார்பாக ஆண்டுதோறும் மலேசிய,  சிங்கப்பூர், இலங்கை நூல்களுக்கு  விருதும் பண முடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த மலேசிய நூலாக அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் (படம்) ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ எனும்  நூல் வாகை சூடியிருக்கிறது.

இலங்கையில் விருதளிப்பு விழா

#TamilSchoolmychoice

இதற்கான விருதளிப்பு விழா எதிர்வரும் 21.1.2017ஆம் தேதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருப்பதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அயலகக் குழுத் தலைவர் பெ. இராஜேந்திரன் (படம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Rajendran-writers-assocதமிழகத்திலிருந்து  மலேசிய, சிங்கப்பூர் படைப்புகளுக்கு  உரிய, உயரிய அங்கீகாரம் வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழவேள் கோ. சாரங்கபாணி பெயரில் ஓர் இருக்கையை சிங்கைத்  தொழிலதிபர் தமிழ் நெஞ்சர் முஸ்தாபா உருவாக்கினார்.

மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் நூல்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவற்றில் ஒரு சிறந்த நூலுக்கு இதன் மூலம் ‘கரிகாற்சோழன் விருது’ வழங்கப்பட்டு வந்தது.

இலங்கை எழுத்தாளர்களும் இந்தப் பரிசுத் திட்டத்தில் இணைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்  அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் அறிவிப்பை கடந்த ஆண்டு  திரு. முஸ்தாபா வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டின் போட்டியில் மூன்று நாட்டு எழுத்தாளர்களும் பங்கு பெற்றனர்.

அவர்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு அதன் பரிசளிப்பு விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கிறது. சுழல் முறையில்  தஞ்சாவூர், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய பகுதிகளில் இந்த விருதளிப்பு நடைபெற்று வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள், கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பாகும்.

Subra-speaking-Seeni Naina-Book Releaseஅமரர் சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூல் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டபோது…

பண்பலை ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் பொன். கோகிலம் தயாரிப்பில் சீனி நைனா முகம்மது அவர்களின் உரை தொடர்ந்து இடம் பெற்று வந்தது.  அந்த உரை அதே வாரத்தில்  மக்கள் ஓசை நாளிதழின் ஞாயிறு பதிப்பிலும் இடம் பெற்று வந்தது.  கல்வியாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுதலையும் சீனி நைனா முகம்மதுவின் உரை கவர்ந்தது.

‘உங்கள் குரல்’ பத்திரிகையின் துணையாசிரியர் சு. கமலா இந்த நூலைத் தொகுத்தார். இதன் வெளியீட்டுக்கான செலவுகளை சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழின் மீது பற்றுக் கொண்ட சில கல்வியாளர்கள் ஏற்றுக் கொண்டனர் என்றும் இராஜேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் சிந்துராஜ் பொன்ராஜ் எழுதி வெளியிட்ட ‘மாறிலிகள்’ எனும் சிறுகதை நூலும் இலங்கையின் சிறந்த நூலாக மு. சிவலிங்கம் எழுதிய  ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ எனும் நாவலும்  விருதுகள் பெறும் மற்ற இலக்கியப் படைப்புகளாகும்.