Home Featured இந்தியா பெங்களூரில் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ – செல்லியலில் நேரடிச் செய்திகள்!

பெங்களூரில் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ – செல்லியலில் நேரடிச் செய்திகள்!

901
0
SHARE
Ad

pbd-2017-logoகோலாலம்பூர் – உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் ‘பிரவாசி பாரதிய திவாஸ் 2017’ மாநாடு, நாளை ஜனவரி 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை மூன்று நாட்கள், கர்நாடக மாநிலம் பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

அதில் முதற்கட்டமாக வரும் ஜனவரி 7-ம் தேதி, இளைஞர் பிரவாசி பாரதிய திவாஸ் துவங்குகிறது. அதில் இந்தியாவின் உருமாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

அதனையடுத்து, வரும் ஜனவரி 8-ம் தேதி, ‘பிரவாசி பாரதிய திவாஸ் 2017’ மாநாடு அதிகாரப்பூர்வமாகத் துவங்குகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். அன்றைய நாளில், இந்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களும் உரையாற்றுகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், வரும் ஜனவரி 9-ம் தேதி, முழு அமர்வுகளும், நிறைவு அமர்வுகளும், பாரதிய சம்மன் விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது.

மலேசியா சார்பில், அமைச்சர்களும், பேராளர்களும், ஊடகவியலாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இன்று வெள்ளிக்கிழமை பெங்களூர் புறப்பட்டுச் செல்கின்றனர்.

மலேசியா சார்பில் கலந்து கொள்ளவுள்ள அதிகாரபூர்வ செய்தியாளர்கள் குழுவில் இந்த முறை செல்லியலும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இதன் மூலம் செல்லியல் வாசகர்கள் இம்மாநாடு குறித்த செய்திகளை செல்லியல் இணையத் தளம், செல்லியல் முகநூல் மற்றும் டுவிட்டர் தளங்களின் மூலமாகவும், செல்லியல் செயலியின் மூலமாகவும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

1915-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9-ஆம் தேதி மும்பை துறைமுகத்தை கப்பல் மூலம் வந்தடைந்தார். அவர் நாடு திரும்பிய பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து, 1947 இந்தியாவும் சுதந்திரம் பெற்றது.

அதனை முன்னிட்டு, ஆண்டு தோறும் ஜனவரி 9-ஆம் நாளை வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள் நாடு திரும்பும் நாளாக அறிவித்து அதனை ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ என்ற பெயரிலான மாநாடகக் கொண்டாடி வருகின்றது.

ஆண்டு தோறும், ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் இந்த மாநாடு, இந்த முறை பெங்களூரில் நடைபெறுகின்றது.