Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘சத்ரியன்’ – முதல்பாதி விறுவிறுப்பு! இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாம்!

திரைவிமர்சனம்: ‘சத்ரியன்’ – முதல்பாதி விறுவிறுப்பு! இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாம்!

766
0
SHARE
Ad

Sathriyan1கோலாலம்பூர் – ‘சத்ரியன்’ என்ற தலைப்பு, ஹீரோ போலீசாக இருக்கும் படத்துக்கு மட்டும் தான் வைக்க வேண்டுமா என்ன? ஹீரோ ரௌடியாக இருக்கும் படத்திற்கும் வைக்கலாமே? என்று நினைத்திருப்பார்கள் போல, அதான் இந்தப் படத்திற்கு ‘சத்ரியன்’ என்று பெயர் வைத்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் தான் ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படங்களை இயக்கியவர்.

கதைப்படி, திருச்சியில் பெரிய ரௌடி சமுத்திரன் (சரத் லோகிதாசா ). திருச்சியை தனது கைக்குள் வைத்துக் கொண்டு அடக்கி ஆள்கிறார். அவருக்கு எதிரியான அருள்தாஸ் அரசியல்வாதி மற்றும் போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு சமுத்திரனின் கதையை முடித்துவிடுகிறார்.

பிறகு அருள்தாஸ் திருச்சியில் பெரிய ரௌடியாகிவிடுகிறார். இதனிடையே, சரத் லோகிதாசாவின் கும்பலில் இருந்த தீவிர விசுவாசியான குணா (விக்ரம் பிரபு), நிர்கதியாக இருக்கும் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்.

#TamilSchoolmychoice

அது அப்படியே காதலாக மாறுகிறது. காதலி சொல்படி கேட்டு திருந்தி வாழ ஆசைப்படுகிறார் விக்ரம் பிரபு. ஆனால், சும்மா விடுவார்களா ரௌடி கும்பல்? விக்ரம் பிரபுவை மீண்டும் தங்கள் பக்க இழுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் விக்ரம் பிரபு குடும்ப வாழ்க்கையில் உறுதியாகிவிடுகிறார்.

இந்நிலையில், சரத் லோகிதாசா கும்பலில் அடுத்த நிலையில் இருந்த விஜய் முருகனும், அருள் தாசும் இணைந்து விக்ரம் பிரபுவை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து விக்ரம் பிரபு தப்பிக்கிறாரா? எதிரிகளிடமிருந்து உயிர் பிழைக்கிறாரா? என்பது தான் பிற்பாதி கதை.

ரசிக்க

Sathriyan-Movie-Stillsவிக்ரம் பிரபு ..நடிப்பில் வித்தியாசமாக எதுவும் செய்யாவிட்டாலும் கூட, எல்லா வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கும் அவரது முகவெட்டு, இதற்கும் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.

பக்கத்துவீட்டில், நமது தெருவில் பார்க்கும் இளைஞனின் சாயலில் இருக்கிறார். அதேவேளையில், ஆக்சன் காட்சிகளில் மிகவும் ஈடுபாடுகாட்டி நடித்திருக்கிறார்.

அவருக்குப் பொருத்தமாக மஞ்சிமா மோகனும் திருச்சி பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சரத் லோகிதாசா, அருள்தாஸ் ஆகிய இருவரும் அந்தக் கதாப்பாத்திரங்களில் மிரட்டுகிறார்கள். இவர்களோடு ஆடுகளம் நரேனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் யுவன் ‌ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அருமை. அதற்கேற்ப சிவக்குமார் விஜனின் ஒளிப்பதிவும் திருச்சி நகரை மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

சலிப்பு

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை கடைசி வரைத் தக்க வைக்காத திரைக்கதை அமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாகத் தெரிகின்றது.

sathriyan21இடைவேளையிலும், இரண்டாம் பாதியிலும் ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரத் தவறிவிட்டது. காரணம் திருந்தி வாழும் ரௌடி, அவனைத் திருத்தும் காதல் எனப் பல திரைப்படங்களில் பார்த்துப் பழகிப் போய்விட்ட காட்சிகளில் புதுமை இல்லாததால் சலிப்பு தான் ஏற்படுகின்றது.

அதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அல்லது திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கலாம்.

அதேபோல், யோகிபாபு போன்ற நடிகரை கதையுடன் கூடிய காமெடிக்காட்சியில் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம். அவரும் இப்படத்தில் பெயருக்கு வந்து போகிறார்.

இது இன்னும் சில தொய்வுகளால் இரண்டாம் பாதி கதை மிகவும் மெதுவாக நகர்வது போல் தெரிகின்றது. எனினும், ஆங்காங்கே வரும் வசனங்களும், ஆக்சன் காட்சிகளும் அதனை ஈடுசெய்கின்றன.

மொத்தத்தில், ‘சத்ரியன்’ – முதல் பாதி விறுவிறுப்பு! இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாம்!

-ஃபீனிக்ஸ்தாசன்