Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘நிபுணன்’ – விறுவிறுப்பான கிரைம் நாவல் படித்த உணர்வு!

திரைவிமர்சனம்: ‘நிபுணன்’ – விறுவிறுப்பான கிரைம் நாவல் படித்த உணர்வு!

1445
0
SHARE
Ad

Nibunan2கோலாலம்பூர் – சீரியல் கில்லர்.. இந்தப் பெயரைக் கேட்டாலே சட்டென ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் நாவல்கள் தான் நினைவுக்கு வரும்.

நகரில் தொடர் கொலைகள் நடக்கும்.. எல்லாவற்றிற்கும் ஒரு இணைப்பு இருக்கும். அதனை மோப்பம் பிடித்து துப்பறியும் ஒரு விசாரணைக்குழு, அதிலுள்ள முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து இறுதியில் கொலைகாரனை சுற்றி வளைக்கும்.

nibunan1இந்த விறுவிறு கொலை விளையாட்டை அப்படியே அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமியை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

#TamilSchoolmychoice

முகத்தில் எப்போதும் உயரதிகாரிக்குரிய திமிரும், லேசான குசும்புமாக அர்ஜூன், விளையாட்டுத்தனமாக கொலைகாரனைத் துரத்தும் பிரசன்னா, ஆங்கிலப் படங்களைப் பார்த்து கொலையைப் பல கோணங்களில் கற்பனை செய்யும் வரலட்சுமி என படத்தில் அசத்தல் கூட்டணி.

படத்தின் இன்னொரு ஹீரோவாகத் தெரியும் திரைக்கதை, பரமபத விளையாட்டைப் போல் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றாலும் கூட, ரசிகர்களைக் குழப்பாமல் தீர்வு சொல்லியிருக்கிறது. அதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். அதற்கேற்ப அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், நவீனின் பின்னணி இசையும் மிரட்டியிருக்கிறது.

இறுதி வரை கொலைகாரன் யார்? என்று தெரியாமல் வைத்து நகர்த்திய விதம் அருமை.

அதேபோல், அர்ஜூனை வேலை செய்யவிடாமல் தடுக்கும் அந்த உடல் பிரச்சினை, அர்ஜூன் ஜோடி ஷ்ருதி ஹரிஹரனின் ஆர்டிஸ்ட் கதாப்பாத்திரம், அர்ஜூன் தம்பி வைபவின் புத்திசாலி கதாப்பாத்திரம் என படம் முழுவதும் அர்ஜூனோடு சேர்ந்து நம்மையும் பலரை சந்தேகப்பட வைத்திருக்கிறார்கள்.

அர்ஜூனுக்கு இது 150-வது படமாம்.. மனிதர் இன்னும் அதே கட்டழகோடு, டிஜிபி ரஞ்சித் காளிதாஸ் கதாப்பாத்திரத்திற்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகிறார். (உங்களுக்கு வயசே ஆகாது அர்ஜூன் சார்)

மொத்தத்தில்.. ‘நிபுணன்’ – விறுவிறுப்பான கிரைம் நாவல் படித்த உணர்வு!

-ஃபீனிக்ஸ்தாசன்