Home நாடு தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி – மஇகாவின் கோரிக்கைக்கு மாமன்றம் ஆதரவு!

தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி – மஇகாவின் கோரிக்கைக்கு மாமன்றம் ஆதரவு!

1098
0
SHARE
Ad

Hindu Dharma Mamandram Logo 440 x 218கோலாலம்பூர் – நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் சமயக் கல்வியை அமலுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம், பிரதமரிடம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற்ற மஇகாவின் 71-வது தேசிய பொது பேரவையில் முன்வைத்த கோரிக்கையை மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் வரவேற்று ஆதரிக்கின்றது என அதன் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை ஏஎம்என் தெரிவித்தார்.

MHDM President Mr.Radhakrishnan Alagamalai AMNஇது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பின் அதன் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை வெளியிட்டிருக்கும் பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இக்கோரிக்கையை மலேசிய இந்துதர்ம மாமன்றமும் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முன்வைத்து வருகிறது. கடந்த 11 ஜூன் 2017 மாமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்து சமயக்கல்வி அமலாக்கத் திட்டம் குறித்த கூட்டத்தில் 16 இந்து இயக்கங்கள் கலந்துகொண்டு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.”

#TamilSchoolmychoice

“மேலும் மாமன்றத்தின் பாடத்திட்டங்களையே தமிழ்ப்பள்ளிகளில் பயன்படுத்திக்கொள்வதற்கும் ஆதரவு தெரிவித்தனர். 8 ஜூலை 2017 நடைபெற்ற இவ்வாண்டின் மலேசிய இந்துதர்ம மாமன்ற பேராளர் மாநாட்டிலும் இந்து சமயக்கல்வியைக் கட்டாய பாடமாகவும் பாட அட்டவணை நேரத்திற்குட்பட்ட வகுப்பாக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.”

“அவ்வகையில், சமயக்கல்வி பாடத்திற்கான முழு ஆவணங்களையும் மாமன்றம் தயாரித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமய ஆசிரியர்களுக்கான பயிற்றிகள், கையேடுகள் மற்றும் மாணவர்களுக்கான பாடநூல்கள், பயிற்சி நூல்கள், இதர சமய நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சமய ஆசிரியர்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.”

“முழுமையான இந்து சமயக் கல்வியைப் போதிக்க இவை சிறந்த பாடத்திட்டமாக அமையும் என்றும், உடனடியாக சமயக்கல்வியை அமல்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றும் மாமன்றமும் இதர இந்து இயக்கங்களும் நம்பிக்கைக்கொண்டுள்ளன.”

“இந்திய சமுதாயத்தின் நற்தோற்றத்திற்கு இந்து சமயக் கல்வி வித்திடும். எனவே, அரசாங்கம் இக்கோரிக்கைக்குச் செவிசாய்க்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கோரிக்கையை நமது பிரதமர் பொதுத் தேர்தலுக்கு முன்னரே நிறைவேற்றுவார் என்றும் கூடிய விரைவில் தமிழ்ப்பள்ளிகளில் சமயக் கல்வி  அமல்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது” என்று இராதாகிருஷ்ணன் அழகுமலை தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.