Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘கருப்பன்’ – பார்த்துச் சலித்த காட்சிகள்.. விஜய்சேதுபதி நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது!

திரைவிமர்சனம்: ‘கருப்பன்’ – பார்த்துச் சலித்த காட்சிகள்.. விஜய்சேதுபதி நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது!

1504
0
SHARE
Ad

karuppan2கோலாலம்பூர் – கீரிப்பட்டியின் மாடுபிடி வீரரான விஜய் சேதுபதி, மாமா சிங்கம்புலியுடன் குடியும் கும்மாளமுமாக ஊரைச் சுற்றி வருகிறார்.

அந்த ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பசுபதியின் மாட்டைப் பிடித்து விட, அதற்காக அவரது தங்கை தான்யாவைத் திருமணம் செய்கிறார் விஜய்சேதுபதி.

அங்கு தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. பசுபதியின் உறவுக்காரரான பாபி சிம்ஹா தான்யாவைத் திருமணம் செய்ய ஆசை வைத்திருக்க, இடையில் விஜய் சேதுபதி வந்து அவரைக் கல்யாணம் செய்துவிடுவாதால் தீராத பகை கொள்கிறார்.

#TamilSchoolmychoice

Karuppan3இந்நிலையில், பாபி சிம்ஹா தந்திரம் செய்து அந்த ஊரின் மிகப் பெரிய ரௌடியும், கந்துவட்டிக்காரனுமான சரத் லோகிதாசாவிற்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே மோதலை ஏற்படுத்திவிடுகிறார்.

இந்த சதி வலையில் இருந்து விஜய் சேதுபதி (கருப்பன்) தப்பித்தாரா? மனைவி தான்யாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாரா? என்பது தான் பிற்பாதி கதை.

Karuppan‘விருமாண்டி’, ‘கொம்பன்’ என பல படங்களில் பார்த்துச் சலித்த பல காட்சிகள் ‘கருப்பன்’ திரைப்படத்திலும் வருகின்றன. வெட்டியாக ஊர் சுற்றுவது, பஞ்சாயத்து பண்ணுவது, தன்னைச் சுற்றி சதிவலை தெரியாமல் அப்பாவியாக, எல்லோரையும் அன்பு செய்வது என விஜய் சேதுபதியின் கருப்பன் கதாப்பாத்திரம் பல படங்களில் பார்த்த உணர்வு. என்றாலும் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பால் அதனை ரசிக்க வைக்கிறார். அவரைப் பார்த்து தான் இடைவெளி வரை ரசிகர்கள் இருக்கையில் அமர்கிறார்கள்.

பாபி சிம்ஹா.. கிராமத்து கெட்டப்பில் வரைந்து வைத்தது போல் இருக்கிறார். சிரித்துக் கொண்டே பகையை வெளிப்படுத்தும் இடங்களில் இரசிக்க வைக்கிறார்.

தான்யா.. அழகாக இருக்கிறார்.. பளீச்செனத் தெரிகிறார்.. பக்குவமான நடிப்பு.. மகிழ்ச்சி, சோகம் என மிக அழகாக முகபாவனைகளை வெளிப்படுத்துகிறார்.

மற்றபடி பசுபதி, சரத் லோகிதாசா, சிங்கம் புலி ஆகியோரின் கதாப்பாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கின்றது.

Karuppan4இமான் இசையில் பாடல்கள் கிராமத்து மண்வாசனையோடு ரசிக்க வைக்கின்றன. சக்திவேலு ஒளிப்பதிவில் கிராமம், வீதிகள், பசுமை வெளிகள் ஆகியவை கண்களுக்கு குளிர்ச்சி.

என்றாலும், அரைத்த மாவு போன்ற அதே பழைய காட்சிகள், விறுவிறுப்பில்லாத திரைக்கதையால் கருப்பனை ரசிக்க முடியவில்லை. விஜய் சேதுபதி, பசுபதி போன்ற நடிகர்கள் கிடைத்தும் கூட இயக்குநர் பன்னீர்செல்வம் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்