Home நாடு கொலை செய்யப்பட்டபோது கிம் ஜோங் கையில் 1 இலட்சம் அமெரிக்க டாலர்!

கொலை செய்யப்பட்டபோது கிம் ஜோங் கையில் 1 இலட்சம் அமெரிக்க டாலர்!

755
0
SHARE
Ad

Kimjongnammurderersகோலாலம்பூர் – வடகொரியா அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்டபோது, அவர் தன்னுடன் 1 இலட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 422,000 மலேசிய ரிங்கிட்) ரொக்கமாகக் கைவசம் வைத்திருந்தார் என நேற்று நடைபெற்ற அவரது கொலை வழக்கின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனிசிய பெண்மணி சித்தி ஆயிஷா (வயது 25), வியட்னாமியரான டொன் தி ஹூவாங் (வயது 28) ஆகிய இருவரும், கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையம் 2-இல், விஎக்ஸ் (VX) என்ற நச்சு மருந்தை கிம் ஜோங் முகத்தில் தெளித்து அவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். அந்த வழக்கு தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

kimjongnam
கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நாம்

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட காவல் துறை அதிகாரியான வான் அசிருல் நிசாம் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். தற்போது அந்தப் பணம் சிப்பாங் காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கிம் ஜோங் நாம்மின் ஆடைகள், கைக்கடிகாரம், முதுகுப் பை (backpack) ஆகியவை பின்னர் வட கொரிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்தக் காவல் துறை அதிகாரி கூறினார்.

நேற்றைய நீதிமன்ற விசாரணையின்போது, விமான நிலையத்தில் சம்பவம் நடந்த சமயத்தில், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட காணொளிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட பெண்மணிகளின் நடமாட்டங்களை இந்த காணொளிகள் விவரித்தன.

இந்த காணொளி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தாலும், நீதிபதி அந்த ஆட்சேபங்களை நிராகரித்தார்.

நீதிமன்ற விசாரணை இன்று வியாழக்கிழமையும் தொடரும்