Home நாடு திருடர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கிள்ளான் கடை உரிமையாளர்கள்!

திருடர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கிள்ளான் கடை உரிமையாளர்கள்!

1492
0
SHARE
Ad

Klangshopownersகிள்ளான் – கிள்ளானைச் சேர்ந்த பெரும்பாலான கடை உரிமையாளர்கள், திருடர்களின் அட்டகாசத்தால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

தங்களது கடைகளில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதாகக் குறிப்பிடும் அவர்கள், கடைக்குள் இருக்கும் சொற்ப ரிங்கிட்டுகளைக் கொள்ளையடிப்பதற்காக வெளியில் இருக்கும் தகர கதவையும், விலையுயர்ந்த கண்ணாடிக் கதவையும் திருடர்கள் சேதப்படுத்தி, தங்களுக்கு 10,000 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் வரை செலவு வைப்பதாகவும் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக, பண்டார் புக்கிட் திங்கி, தாமான் பாயு பெர்டானா, பண்டார் பொடானிக், சதர்ன் பார்க் மற்றும் தாமான் செந்தோசா ஆகிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களில்,  100-க்கும் மேற்பட்ட கடை உடைப்புச் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகளும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனால், தினமும் தூங்காமல் கடையில் அமர்ந்து விடிய விடிய காவல் காத்துவிட்டு, அதிகாலை வீடு திரும்பினால், திருடர்கள் அதிகாலை 5.30 மணியளவில் கடைக்குள் புகுந்துவிடுவதாகவும் சில வியாபாரிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

தற்போது, சில வியாபாரிகள் கடையின் கதவை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு, “உள்ளே பணம் இல்லை. கதவு திறந்து தான் இருக்கிறது. உடைக்க வேண்டாம்” என்று ஒரு பேப்பரில் எழுதி அதைத் திருடர்கள் பார்க்கும் படி கடைக்கு முன்பு ஒட்டிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.