Home நாடு மஇகா, சங்கப் பதிவக வழக்கு: கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

மஇகா, சங்கப் பதிவக வழக்கு: கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

713
0
SHARE
Ad

Malaysia Courtsபுத்ரா ஜெயா – சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், முன்னாள் மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் டத்தோ ராஜூ ஆகிய மூவரும் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு இன்று செவ்வாய்க்கிழமை (5 டிசம்பர் 2017) கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Federal Court – பெடரல் நீதிமன்றம்) விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை மேற்குறிப்பிட்ட மூவரும் அவர்களின் வழக்கறிஞரின் மூலமாக இன்று நீதிமன்றத்தில் அதிகாரபூர்வமாக மீட்டுக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MIC-logoஇருதரப்புக்கும் இடையில் சமரசப் போக்கு நிலவுவதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் இணக்கமாக, கட்சியின் நலனையும், ஒற்றுமையையும் கவனத்தில் கொண்டும், மஇகா நலன்களுக்கு முக்கியத்துவம் தரும் விதமாகவும் இந்த வழக்கை மேற்கொண்டுத் தொடராமல்  நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

மஇகாவும், சங்கப் பதிவகமும் கூட்டாக இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டனர் என்ற புகார்களின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, விசாரணைக்குப் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் ஏ.கே.இராமலிங்கம் குழுவினர் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மஇகா மற்றும் சங்கப் பதிவகம் சார்பில் கூட்டரசு  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கு கடந்த மே மாதத்தில் கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணை டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் எனவும் கூட்டரசு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படிதான் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.