Home நாடு அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு ஏன்? – நூர் ஜஸ்லான் விளக்கம்!

அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு ஏன்? – நூர் ஜஸ்லான் விளக்கம்!

767
0
SHARE
Ad

Nur-Jazlan-Mohamadகோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமாக இருந்தாலும், எந்த ஒரு சிறைக் கைதியாக இருந்தாலும், யாராவது அவர்களைச் சந்திக்க விரும்பினால் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமது கூறியிருக்கிறார்.

“குற்றவாளியாக இருப்பவர் ஒரு சுதந்திரமான மனிதர் அல்ல. அவரது (அன்வாரின்) வாழ்க்கை சிறைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கு சந்திக்க அனுமதி கிடையாது” என நூர் ஜஸ்லான் கூறியதாக ‘தி மலேசியன் இன்சைட்’ கூறியிருக்கிறது.

“குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக, வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள், ஏதேனும் ஒரு முக்கியமான காரணம் இருந்தால் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். டாக்டர் மகாதீரைப் பொறுத்தவரையில் அன்வாரைச் சந்திக்க அவரிடம் எந்த ஒரு காரணமும் இல்லை” என நூர் ஜஸ்லான் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தோள்பட்டை அறுவை சிகிச்சைப் பின்னர்,‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ மருத்துவமனையில் மேற் சிகிச்சை எடுத்து வரும் அன்வாரைச் சந்திக்க நேற்று புதன்கிழமை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது அங்கு சென்றார்.

ஆனால் சிறை அதிகாரிகள், அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுத்தனர்.

சந்திப்புக்கான அனுமதி மறுப்பு உத்தரவு, உள்துறை அமைச்சிலிருந்து வந்திருப்பதாக சிறை அதிகாரிகள், மகாதீரிடம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.