Home நாடு “சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – டாக்டர் சுப்ராவின் பொங்கல் வாழ்த்து

“சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – டாக்டர் சுப்ராவின் பொங்கல் வாழ்த்து

924
0
SHARE
Ad

subra-traditional-featureகோலாலம்பூர் – இன்று பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழர் பெருமக்களுக்கும், மகர சங்கராந்தி கொண்டாடும் தெலுங்கு வம்சாவளியினருக்கும் மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பொங்கலை முன்னிட்டு டாக்டர் சுப்ரா வழங்கியிருக்கும் வாழ்த்து செய்தி பின்வருமாறு;

“உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம்” என உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நன்னாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையையும் நன்றியையும் செலுத்தும் பொருட்டு பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாகவும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்புற அமைந்த பொங்கல் பண்டிகையைத் தமிழர் திருநாளாகவும் கொண்டாடி வருவதும் ஒரு மரபு.

#TamilSchoolmychoice

Ponggal-message-banner-drsubraஅவ்வகையில், இந்நாளை பொங்கல் திருநாளாகக் கொண்டாடவிருக்கும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும், தெலுங்கு வம்சாவளி அன்பர்களுக்கு மகர சங்கராந்தி பெருநாள் வாழ்த்துகளையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மதத்தால் நாம் அனைவரும் ஒன்றே என்பதை மனதில் கொண்டு இப்பொங்கல் திருநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வலு வலு கால வகையினானே” எனும் முதுமொழிக்கேற்ப பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் நம்மிடையே காலம் காலமாக இருந்து வருகின்றது. ஆனால், அது வெறும் பொருட்களை மட்டும் எரிப்பதோடு நின்று விடாது, காலத்திற்கு உதவாத, பயன்படாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் தவிர்த்து, காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வகையில், பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொண்டு சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதனை நம் சமுதாயம் தெளிந்து உணர வேண்டிய நேரமிது. நம் சமுதாயத்தின் எதிர்கால நலனையும் தேவைகளையும் அவசியங்களையும் முன்னிறுத்தி தெளிவான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்கும் நேரமிது.

ponggal-eng-message-drsubra“தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்” என்ற முதுமொழி வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறிக்கின்றது. செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை. எனவே நாட்டு மக்கள் அனைவரது இடர்களும் நீங்கி நல்வழிப் பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இவ்வாண்டு தைத்திருநாளானது எல்லோரது வாழ்விலும் புதியதொரு வழிப் பிறந்து நற்காரியங்கள் அனைத்தும் ஈடேறவும் வேண்டும். மேலும், அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதாரத்தில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கண்டு, வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

உலகெங்கும் வாழும் பெருமக்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும். ‘இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்’ எனக்கூறி எனது மனமார்ந்த பொங்கல் & மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உளமார தெரிவித்துக் கொள்கிறேன்.”