Home நாடு சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது – 26 பேர் காயம்! நால்வர் கைது

சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது – 26 பேர் காயம்! நால்வர் கைது

1212
0
SHARE
Ad

fire crackersசுங்கைப்பட்டாணி – நேற்று வியாழக்கிழமை சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் 26 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் நால்வரைக் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8.00 மணியளவில் சுங்கைப்பட்டாணி ஆலயத்தில் இருந்து இரத ஊர்வலம் புறப்பட்ட வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய கோலமூடா வட்டாரக் காவல் துறைத் தலைவர் ஏசிபி சைபி அப்துல் ஹமிட் 25 முதல் 34 வயது வரையிலான நால்வர் இதன் தொடர்பில் நள்ளிரவு வாக்கில் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.

வெடிப்புப் பொருட்களைக் கொண்டு மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்துவதை குற்றமாக்கும் சட்டப் பிரிவின் கீழ் அந்த நால்வரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏறத்தாழ 8.30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் காயமடைந்தவர்களில் 5 வயதான குழந்தை முதற்கொண்டு 59 வயதான மூதாட்டி வரை 12 பெண்களும், மேலும் 14 ஆண்களும் அடங்குவர். அவர்களுக்கு மருத்துவமனையில் வெளி சிகிச்சை வழங்கப்பட்டது.

கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் இந்த பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.