Home நாடு “மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை

“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை

1456
0
SHARE
Ad
Muthu-Nedumaran-feature
முத்து நெடுமாறன்

தஞ்சோங் மாலிம் – இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் மேலாளர் வாரியங்களுக்கான 2-வது தேசிய நிலையிலான கருத்தரங்கத்தில் மலேசியாவின் பிரபல கணினி வல்லுநர் முத்து நெடுமாறன் முதன்மை உரை (key note address) ஆற்றுகிறார்.

“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் தனது முதன்மை உரையை நிகழ்த்துகிறார்.

முத்து நெடுமாறன் வழங்கும் இந்த முதன்மை உரைக்கான ஆய்வுக் கட்டுரையை ஜோகூரைச் சேர்ந்த திருமதி கஸ்தூரி இராமலிங்கமும் இணைந்து வழங்குகிறார். தமிழ்ப்பள்ளி ஆசிரியையான கஸ்தூரி இராமலிங்கம் தமிழ்ப் பள்ளி மற்றும் தமிழ்க் கல்வி போன்ற அம்சங்களில் பல ஆய்வுகள் செய்திருப்பதோடு, ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்திருக்கிறார்.

Kasturi Ramalingam
கஸ்தூரி இராமலிங்கம்

மின்னுட்ப மேம்பாடுகளும் தமிழ்ப் பள்ளிகளும்

#TamilSchoolmychoice

மின்னுட்ப மேம்பாடுகளினால் பயன்படாத துறை எதுவுமே இல்லை என்று துணிந்து கூறலாம். கல்வித் துறையும் இதற்கு விதிவிலக்கன்று. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்ற நடவடிக்கைகளுக்கு, மின்னுட்ப மேம்பாடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனைப் பல நோக்கங்களில் ஆராயலாம். அவற்றுள் கற்றலுக்கு உதவும் மின்னுட்ப  உருவாக்கங்கள் முதன்மையான ஒன்று.

பள்ளிக்குச் செல்லும் முன்னரே குழந்தைகளை ஆங்கில மொழியோடு ஈடுபடுத்தப் பல உருவாக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எழுத்துகளையும் சொற்களையும் விளையாட்டாகவே குழந்தைகள் கற்கின்றனர்.  எழுத்துகளின் வடிவங்களைத் தொட்டு விளையாடுகின்றனர். பல நிறங்களிலான எழுத்து வடிவங்களை அடுக்கி மகிழ்கின்றனர். வடிவங்களை விரைவில் நினைவில் கொள்கின்றனர்.

தமிழ் எழுத்துகளோடும் சொற்களோடும் இதே மனமகிழ் சூழலில் இந்தக் குழந்தைகள் விளையாடிக்கொண்டே கற்பதற்கானத் திட்டம் ஒன்றனை முத்து நெடுமாறன்-கஸ்தூரி இராமலிங்கம் இந்தப் படைப்பு பகிரவிருக்கிறது.

மின்னுட்ப உருவாக்கம் மையமாக இருந்தாலும் பல மாறுதல்களைக் கொண்ட நடவடிக்கைகளின் வழி எழுத்துகளோடும் சொற்களோடும் மாணவர்களை ஈடுபடவைக்கும்.

அன்று பாட்டி சொன்ன கதைகள் வழி பிள்ளைகளின் மொழி வளம்பெற்றது. கற்பனைத் திறன் வளர்ந்தது. இன்று ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை மின்னுட்ப மேம்பாடுகளைக் கொண்டு  எவ்வாறு நிறைவு செய்யலாம் என்பது குறித்தும் சில பரிந்துரைகள் இந்தப் படைப்பில் முன்வைக்கப்படும்.

இணையம் நமக்கு வழங்கியுள்ள இணைக்கப்பெற்ற சூழலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனையும், பள்ளி, வட்டாரம், மாநிலம், நாடு, அனைத்துலகம் என்னும் அளவில் இந்தக் குழந்தை மாணவர்களின் உருவாக்கங்கள் எவ்வாறு வளர்ந்து விரிவடையலாம் என்பதனைப் போன்ற எண்ணங்களும் இந்தப் படைப்பில் பகிரப்படும்.