Home வணிகம்/தொழில் நுட்பம் மேக்சிஸ் துணை நிறுவனம் ஏர்செல் இந்தியாவில் திவால் ஆனது!

மேக்சிஸ் துணை நிறுவனம் ஏர்செல் இந்தியாவில் திவால் ஆனது!

1278
0
SHARE
Ad

புதுடில்லி – பெரும் கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவை நிறுவனமான ஏர்செல் (Aircel Ltd) திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஏர்செல் நிறுவனம் திவால் நிறுவனம் என அறிவிக்கக் கோரும் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கத்தின் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது. மேக்சிஸ் நிறுவனம் மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் துறையில் மேற்கொண்ட முதலீடுகள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

கடந்த பல மாதங்களாக வங்கிகளுடன் நிறுவனத்தின் கடன்களை மறு சீரமைப்பு செய்ய நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏர்செல் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியமும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம் இதுவரையில் ஏறத்தாழ 155 பில்லியன் ரூபாய் (மலேசிய மதிப்பில் 9.48 பில்லியன் ரிங்கிட்) கடனில் சிக்கிக் கொண்டுள்ளது.