Home Video “என்னால் எம்ஜிஆராக முடியாது; நல்ல தலைவனாக முடியும்” – ரஜினி உரை (காணொளியுடன்)

“என்னால் எம்ஜிஆராக முடியாது; நல்ல தலைவனாக முடியும்” – ரஜினி உரை (காணொளியுடன்)

876
0
SHARE
Ad

சென்னை – சென்னை மதுரவாயலில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அங்கிருந்த மாணவர்கள் முன் உரையாற்றினார்.

ரஜினியின் இந்த உரை அங்கிருந்த மாணவர்கள் மட்டுமின்றி, தமிழகமெங்கும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

தன் மீது தமிழக அரசியல் தலைவர்கள் வைத்து வரும் பல்வேறு விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அம்மேடையைப் பயன்படுத்திக் கொண்ட ரஜினி, தமிழகத்தில் ஒரு நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருப்பதை நிரப்புவதற்காக தான் அரசியலுக்கு வருவதாக ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும், கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று சிலர் கூறிவருவதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி, மக்கள் இன்னும் அவரை மறக்கவில்லை. 1973-ல் எம்ஜிஆரை முதன் முதலாகப் பார்த்தேன். தங்க நிறத்தில் சூரியன் போல் ஜொலித்தார். இவருக்கு எப்படி சந்திரன் எனப் பெயரிட்டார்கள் என ஆச்சரியப்பட்டேன். எம்ஜிஆர் ஒரு யுகப்புருஷன், அவரைப் போல இனி யாரும் வர முடியாது. ஆனால் என்னால் எம்ஜிஆர் வழியில் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ரஜினி தெரிவித்தார்.

மேலும், எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், தான் ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனது உடல்நிலை குறித்து எம்ஜிஆர் தினமும் மருத்துவர்களிடம் விசாரித்ததாகவும் ரஜினி குறிப்பிட்டார்.

அதேவேளையில், லதாவின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதிக்காத போது, எம்ஜிஆர் தலையிட்டு, லதா குடும்பத்தாரிடம் பேசி, தனக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் ரஜினி, எம்ஜிஆருக்கும் தனக்குமான பல்வேறு நெருக்கமான தருணங்களை அம்மேடையில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

ரஜினியின் உரையைக் கீழ்காணும் யுடியூப் இணைப்பின் வழி முழுமையாகக் கண்டு களிக்கலாம்: