Home நாடு விசாரணைக்குள்ளான சிஐடி தலைவர் விடுப்பு எடுக்கத் தேவையில்லை: சாஹிட்

விசாரணைக்குள்ளான சிஐடி தலைவர் விடுப்பு எடுக்கத் தேவையில்லை: சாஹிட்

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்- ஆஸ்திரேலிய வங்கியில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வைத்திருந்ததற்காக, விசாரணை செய்யப்பட்டு வரும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜுமுடின் முகமட், விசாரணை முடியும் வரை பணிக்கு விடுமுறை எடுக்கத் தேவையில்லை என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் தனக்கு இருந்த நிதி குறித்து, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹாருனிடம் அவர் விளக்கமளித்துவிட்டார் என்றும் சாஹிட் ஹமீடி குறிப்பிட்டிருக்கிறார்.

“ஆணையர் வான் நஜுமுடின், இந்த விவகாரத்தில் விளக்கமளித்துவிட்டார். நாங்கள் அதனை உண்மை என்று நம்புகிறோம். அவர் கொடுத்த விளக்கத்திற்கு ஆதாரம் இருக்கிறது. ஐஜிபி விற்பனை மற்றும் வாங்கிய ஒப்பந்தங்களைப் பார்வையிட்டுவிட்டார்” என்று சாஹிட் இன்று வியாழக்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்து ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்த தேசிய காவல்படைத் தலைவர் முகமட் ஃபுசி ஹாருன், “புக்கிட் அம்மான் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் வான் அகமட் நஜ்முடின் முகமது, ஷா ஆலமிலுள்ள தனது வீட்டை விற்றதன் மூலம் பெற்ற 700,000 ரிங்கிட்டை (260,770 ஆஸ்திரேலிய டாலர்கள்) ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வங்கிக் கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

எனினும், நபர் ஒருவர் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் வான் நஜுமுடினுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.