Home நாடு தேர்தல் முறைகளில் மாற்றமா? – “ஏற்கமாட்டோம்” என மகாதீர் அறிவிப்பு!

தேர்தல் முறைகளில் மாற்றமா? – “ஏற்கமாட்டோம்” என மகாதீர் அறிவிப்பு!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையம், 14-வது பொதுத்தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஏற்காது என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.

வரும் தேர்தலில், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணப்படும் முறை மற்றும் அதன் முகவர்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படும் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

கட்சிகள் தங்களது வாக்குப்பதிவு முகவர் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்களின் பெயர்களை வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேர்தல் நாள் அன்று அளிக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவுகள் ஒரே நேரத்தில் நடைபெறும் போன்ற மாற்றங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வரவிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் இவற்றை ஏற்க மறுக்கும் மகாதீர், “இவையெல்லாம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் இவ்வாறான மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயாராகவில்லை” என இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவக் கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
#TamilSchoolmychoice

மேலும், இந்த மாற்றங்களுக்கு எதிராக, பக்காத்தான் சார்பில் மறுப்புக் கடிதத்தை நாளை எழுதவிருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.