Home நாடு ‘தவறுகளை உணரவே நீண்ட ஆயுளுடன் இருக்கிறார்’ – ‘முன்னாள் தலைவர்’ குறித்து சாஹிட் கருத்து!

‘தவறுகளை உணரவே நீண்ட ஆயுளுடன் இருக்கிறார்’ – ‘முன்னாள் தலைவர்’ குறித்து சாஹிட் கருத்து!

727
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முந்தைய தவறுகளை உணர்வதற்காக தான் ‘முன்னாள் தலைவர்’ நீண்ட ஆயுளுடன் இருப்பதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியிருப்பதாக உத்துசான் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும், அல்லா நிச்சயமாக அந்த முன்னாள் தலைவரை, அவருக்கு முடிவு வருவதற்குள் தனது தவறுகளை உணர வைப்பார் என்றும் சாஹிட் கூறியிருப்பதாகவும் உத்துசான் குறிப்பிட்டிருக்கிறது.

“சில தலைவர்கள் 90 வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் ஓய்வு அடையாமல் இருக்கிறார்கள். அல்லா தான் அவர்களை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

“அதற்குக் காரணம், தனது முந்தைய தவறுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்பதற்கும், இரண்டாவது அந்த மனிதருக்கு திருந்த ஒரு வாய்ப்பு வழங்கவும் தான். அந்த மனிதர் தனது இரண்டாவது வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார். அது போதும்” என்று சாஹிட் கூறியிருக்கிறார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவராக, 93 வயதான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது பொறுப்பேற்று, தற்போது அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், 93 வயதான மகாதீர் மீண்டும் பிரதமர் பதவி வகிக்கத் தகுதியானவரா? என்று அண்மையில் ஒரு கலந்துரையாடல் கூட நடைபெற்றது.

ஆனால், அதற்கெல்லாம் சளைக்காத மகாதீர், “93-வது வயதில் என்னால் பல வேலைகளைச் செய்ய முடியும். என்னால் கார் ஓட்ட முடியும். குதிரை சவாரி செய்யவும் முடியும். நஜிப்பைத் தோற்கடிக்கவும் முடியும்” என மகாதீர் சவால் விடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.