Home நாடு கெடா, பெல்டாவில் மகாதீர் உரை கேட்க ஆயிரக்கணக்கில் திரண்ட கூட்டம்

கெடா, பெல்டாவில் மகாதீர் உரை கேட்க ஆயிரக்கணக்கில் திரண்ட கூட்டம்

862
0
SHARE
Ad
நேற்று (13 ஏப்ரல் 2018) கெடாவிலுள்ள, பெல்டா புக்கிட் தாங்காவில் உரையாற்றும் துன் மகாதீர்

புக்கிட் காயு ஈத்தாம் – கெடா மாநிலத்திற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லை நகரான புக்கிட் காயு ஈத்தாமை உள்ளடக்கியத் தொகுதி குபாங் பாசு நாடாளுமன்றம். அங்கு அமைந்துள்ள பெல்டா நிலக் குடியேற்றம் புக்கிட் தாங்கா.

நேற்று வெள்ளிக்கிழமை துன் மகாதீர் பெல்டா புக்கிட் தாங்காவுக்கு வருகை மேற்கொண்டபோது அவரை வரவேற்கவும், அவரது பிரச்சார உரையைக் கேட்கவும், ஆயிரக்கணக்கில் அங்கு மக்கள் திரண்டது, கெடா மாநிலத்தில் அவருக்குப் பெருகி வரும் ஆதரவைக் காட்டுவதாகவும், பெல்டா நிலக் குடியேற்றத் திட்டங்களில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக வலுத்துவரும் எதிர்ப்புணர்வை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பல தவணைகளாக, தங்களின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமராகவும், அம்னோ கட்சித் தலைவராகவும் துன் மகாதீரைப் பார்த்து மகிழ்ந்த புக்கிட் தாங்கா பெல்டா மற்றும் குபாங் பாசு தொகுதி மக்கள் நேற்று ஒரு வித்தியாசமான மகாதீரைக் கண்டனர்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சித் தலைவராக – அம்னோவுக்கும், தேசிய முன்னணிக்கும் வாக்களிக்காதீர்கள் என்று தங்களை கேட்டுக் கொள்ளும் தலைவராக – வித்தியாசமான மகாதீரை குபாங் பாசு தொகுதி மக்கள் நேற்று சந்தித்ததோடு, அவரது உரையை ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்வத்துடன் கேட்கவும் செய்தனர்.

பெல்டா நிலத்திட்டங்களை முன்னாள்  பிரதமர் துன் அப்துல் ரசாக் தொடக்கியதற்கான காரணங்களைத் தனது உரையில் விளக்கிய மகாதீர், பெல்டா தொடர்பில் நஜிப் எடுத்த முடிவுகளால் அந்த அமைப்பு எப்படி நஷ்டங்களை எதிர்நோக்கியது என்பதையும், பெல்டா குடியேற்றக்காரர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆனால், மகாதீர் சொன்னதைக் கேட்டு குபாங் பாசுவில் கூடிய மக்கள் அதன்படி நடப்பார்களாக என்பதை எதிர்வரும் மே 9 பொதுத் தேர்தல் முடிவுகள்தான் எடுத்துக் காட்டும்!

-இரா.முத்தரசன்

படங்கள்: நன்றி – துன் மகாதீரின் ‘chedet’ வலைத்தளம்