Home நாடு தெலுக் கெமாங் தொகுதிக்கு பதிலாக ஜெலுபு! போட்டியிடப் போவது யார்?

தெலுக் கெமாங் தொகுதிக்கு பதிலாக ஜெலுபு! போட்டியிடப் போவது யார்?

1099
0
SHARE
Ad

கோலாலம்பூர் – போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோவே போட்டியிடவிருப்பதால், அந்தத் தொகுதிக்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெலுபு தொகுதி ஒதுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் 2013-இல் போட்டியிட்ட சைனுடின் பின் இஸ்மாயில், கடந்த டிசம்பர் 2017-இல் காலமாகிவிட்டார். அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திம் பல தவணைகளாகப் போட்டியிட்டு வென்று வந்த தொகுதி ஜெலுபு ஆகும்.

ஜெலுபு நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்
#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜெலுபு தொகுதியில் போட்டியிட்ட சைனுடின் இஸ்மாயில் 7,101 வாக்குகள் பெரும்பான்மையில் இங்கு பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.

எனவே, தேசிய முன்னணிக்குக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகளை வைத்துப் பார்க்கும்போதும், இந்தத் தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்கள் ஏறத்தாழ 63 விழுக்காடு என்பதை வைத்துப் பார்க்கும் போதும், போர்ட்டிக்சனை விட ஜெலுபு மஇகாவுக்கு பாதுகாப்பான, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகப் பார்க்கப்படுகிறது.

சென்னா, பெர்த்தாங், சுங்கை லூயி, கெளவாங் என 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியத் தொகுதி ஜெலுபு.

ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டால், அடுத்த கட்டமாக இங்கு போட்டியிடப் போகும் மஇகா வேட்பாளர் யார் என்ற ஆர்வமும் மஇகாவினரிடையே தற்போது எழுந்துள்ளது.