Home நாடு “நூருல் மரியாதை தெரியாதவர்; என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார்” – ரோஸ்மா குற்றச்சாட்டு!

“நூருல் மரியாதை தெரியாதவர்; என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார்” – ரோஸ்மா குற்றச்சாட்டு!

769
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா போல் மரியாதை தெரியாதவராக, வளரும் குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதால் தான் பெர்மாத்தா திட்டத்தை, தான் கொண்டு வந்ததாக காபந்து பிரதமரின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் கூறியிருக்கிறார்.

லெம்பா பந்தாயில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய முன்னணியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ரோஸ்மா, நூருல் குறித்து தான் அதிருப்திகளை வெளியிட்டார்.

நூருல் இசா பற்கள் இல்லாமல் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே தனக்குத் தெரியும் என ரோஸ்மா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“இப்போது அவர் என்னைப் பற்றி நட்பு ஊடகங்களில் குற்றம் சாட்டுகிறார். ஆனால் என்னை டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் என்றோ அல்லது அண்டி ரோஸ்மா என்றோ அல்லது மாச்சே ரோஸ்மா என்றோ அழைக்காமல், ரோஸ்மா மான்சோர் என்று அழைக்கிறார்.

“நீங்களாக இருந்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? எனக்கு 65 வயதாகிறது. ஆனால் அவர் என்னை ரோஸ்மா மான்சோர் என்றே கூப்பிடுகிறார். இந்த ஒரு அடிப்படை மரியாதை கூடத் தெரியாதவராக இருக்கிறார்” என்று ரோஸ்மா தெரிவித்தார்.

மேலும், “அதனால் தான், பெர்மாத்தா திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் குழந்தைகளுக்கு, பெரியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை எப்படி மரியாதை செய்ய வேண்டுமெனக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. நமது அடிப்படைக்கு நாம் செல்ல வேண்டும் காரணம் நமது நன்னெறிப் பண்புகள் எல்லாம் தொலைந்துவிட்டன” என்றும் ரோஸ்மா கூறியிருக்கிறார்.