Home நாடு ‘ஜாசா’-வின் புவாட் சர்காஷி, அம்னோவை எதிர்த்து தனித்துப் போட்டி!

‘ஜாசா’-வின் புவாட் சர்காஷி, அம்னோவை எதிர்த்து தனித்துப் போட்டி!

768
0
SHARE
Ad
முகமட் புவாட் சர்காஷி

ஜோகூர் பாரு – அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரும் ஜோகூரிலுள்ள பத்து பகாட் நாடாளுமன்றத் தொகுதியில் 2013-இல் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருமான முகமட் புவாட் சர்காஷிக்கு மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த சர்காஷி தான் அம்னோ வேட்பாளருக்கு எதிராகப் போட்டியில் குதிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அரசாங்கத்தின் பிரச்சார இலாகாவாகச் செயல்படும் ஜாசா (JASA) எனப்படும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநராகவும் சர்காஷி பணியாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

பல தருணங்களில் அவரது செயல்பாடுகளும், கருத்துகளும், கடந்த காலங்களில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. ஜாசாவின் செயல்பாடுகளும் கூட பலத்த கண்டனங்களைச் சந்தித்திருக்கின்றன.

அம்னோ-தேசிய முன்னணிக்கு எதிராகப் போட்டியில் குதிக்கும் சர்காஷியின் செயலை துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியும் கண்டித்திருக்கின்றார். அவர் அம்னோ உச்ச மன்ற இருப்பினராகவும் இருப்பதால், கட்சி விசுவாச உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என சாஹிட் எச்சரித்திருக்கிறார்.

சர்காஷி ஜாசா தலைமை இயக்குநர் பதவியிலிருந்து விலகிவிட்டு பத்து பகாட் தொகுதியிலும், செங்காராங் சட்டமன்றத் தொகுதியிலும் சுயேச்சையாகப் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்து பகாட்டில் செயல்பட்டு வந்த தேசிய முன்னணியின் நடவடிக்கை அறையையும் சர்காஷி மூடி விட்டார்.

பத்து பகாட் தொகுதியில் போட்டியிட சர்காஷிக்கு பதிலாக அம்னோவின் சார்பில் பத்து பகாட் அம்னோவின் மகளிர் தலைவி ஹலிசா அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் பத்து பகாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சர்காஷி, பிகேஆர் கட்சியின் முகமட் இட்ரிஸ் பின் ஜூசியிடம் 1,732 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.