Home உலகம் சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் ‘மோசமான நிர்வாக சீர்கேடு’ – விசாரணையில் அம்பலம்!

சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் ‘மோசமான நிர்வாக சீர்கேடு’ – விசாரணையில் அம்பலம்!

1222
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூரிலுள்ள ‘ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில்’ மிக மோசமான நிர்வாக சீர்கேடு நடத்திருப்பதை அறக்கட்டளை ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிங்கப்பூர் கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் துறை அமைச்சு இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

“கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதி முதல் 2014 ஜூலை 31-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், ஆலயத்தின் அறக்கட்டளையில், நிர்வாகச் சீர்கேடு நடந்திருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்திருக்கிறது. இதில் ஆலயத்தின் பொருளாளர்களும், காசோலைகளுக்கு கையெழுத்திடும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது” என சிங்கப்பூர் கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் துறை அமைச்சு தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னாள் நிர்வாகக் குழு தலைவர் ஆர்.செல்வராஜூ, முன்னாள் அறங்காவலர் மற்றும் நடப்பு நிர்வாகக் குழு தலைவர் சிவகடாச்சம் மற்றும் அறிக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் நடப்பு செயலாளர் ராதா கிருஷ்ணன் செல்வக்குமார் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், கடமையில் கவனமின்மையும், அக்கறையின்மையும் இருப்பதையும், விசாரணை ஆணையம் கண்டறிந்திருக்கிறது.

குறிப்பாக, குறுக்கே கோடு இடப்படாத காசோலைகளை வழங்கியது, அக்காசோலைகளை அறக்கட்டளையில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ள அனுமதித்தது போன்ற செயல்களை நிர்வாகிகள் செய்திருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 1, 2011 முதல் ஜூலை 31, 2014-க்கும் இடையில் 1.5 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு குறுக்கே கோடு இடப்படாத காசோலைகளை ஆலய நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்பதும், 227,000 சிங்கப்பூர் டாலருக்கும் கூடுதலான தொகை கொண்ட 45 காசோலைகள் வருவாய் பெறும் நபர்களின் பெயர்களில் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் அம்லமாகியிருக்கிறது.

குமார் என்பவருக்கு 350,000 சிங்கப்பூர் டாலருக்கு முறையாக, நிர்வாகக் குழு அனுமதியின்றியும், ஒப்பந்தம் இன்றியும், போதுமான ஆதாரங்கள் இன்றியும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.