Home தேர்தல்-14 பத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்!

பத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்!

1047
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பத்து நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் சார்பில் தியான் சுவா போட்டியிடுவதாக இருந்து கடைசி நேரத்தில் வழக்கு ஒன்றின் காரணமாக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தனது வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக, தியான் சுவா, கடந்த திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதன் முடிவு விரைவில் தெரியவரலாம்.

இதனிடையே, பத்து தொகுதியில், தேசிய முன்னணி வேட்பாளர் டாமினிக் லாவ் ஹோய் சாய், பாஸ் வேட்பாளர் அசார் பின் யாஹ்யா ஆகியோரைத் தவிர இன்னும் இரு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அதில் ஒருவர் மஇகாவின் நீண்ட கால உறுப்பினரும், தொகுதித் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவருமான டத்தோ வி.எம்.பஞ்சமூர்த்தி. 14-வது பொதுத்தேர்தலில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ததால், மஇகா சட்டவிதிகளின் படி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சுயேட்சை வேட்பாளர், பத்து தொகுதியிலேயே பிறந்து வளர்ந்தவரான 22 வயது பிரபாகரன் என்ற இளைஞர். 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் மிகக் குறைந்த வயதுடைய வேட்பாளராக இவர் பார்க்கப்படுகின்றார்.

இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் இருவருமே பிகேஆர் சார்பில் பிரதிநிதிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

“தொகுதி மக்களுக்கு பயனளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நான் பேச்சுவார்த்தைக்குத் தயார். இருவருக்குமே இது பயனளிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், பிகேஆர் கட்சியில் இணைவது குறித்து எனது ஆலோசகர்களிடம் கேட்டுத் தான் முடிவெடுக்க முடியும் எனக் கூறி வந்த பிரபாகரன், தற்போது பிகேஆர் கட்சியில் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும், தனது ஆலோசகர்கள் அதற்குச் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், நீதிமன்றம் தியான் சுவா போட்டியிடலாம் என்று கூறினாலும் கூட, தான் தொடர்ந்து பிகேஆர் கட்சிக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார்.

தியான் சுவா போட்டியிட முடியாது என்பது உறுதியானால், பிகேஆர் கட்சி பிரபாகரனைத் தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகின்றது.