Home நாடு ஜமால்-மூசா-நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்

ஜமால்-மூசா-நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்

853
0
SHARE
Ad
மூசா அமான்

கோலாலம்பூர் – குடிநுழைவுத் துறை தரவுகளின்படி முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் மற்றும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் இருவரும் நாட்டை விட்டு வெளியேறியதற்கான தடயங்கள் ஏதுமில்லை என்றாலும், தங்களின் புலனாய்வுகளின்படி அவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் இருக்கின்றனர் என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) புசி ஹருண் அறிவித்துள்ளார்.

மூசா புருணை வழியாக சபாவிலிருந்து வெளியேறி விட்டார் என்று சந்தேகிப்பதாக புசி ஹருண் மேலும் தெரிவித்தார்.

சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடினை குற்றவியல் (கிரிமினல்) ரீதியாக மிரட்டினார் என்பதற்காக காவல் துறையினரால் மூசா தேடப்படுகின்றார். அவர் மே 14 முதல் தொடர்புகளிலிருந்து விடுபட்டு விட்டார்.

ஜமால் இந்தோனிசியாவில்…

ஜமால் முகமட் யூனுஸ்
#TamilSchoolmychoice

இதற்கிடையில் தான் இன்னும் மலேசியாவில்தான் இருப்பதாக ஒரு செம்பனைத் தோட்டத்திலிருந்து காணொளி வழி அறிவித்திருக்கும் ஜமால் முகமட் யூனுஸ், இந்தோனிசியாவில் இருப்பதாகத் தாங்கள் நம்புவதாக புசி ஹருண் தெரிவித்திருக்கிறார். கடத்தல்காரர்களின் பயணப் பாதையைப் பயன்படுத்தி ஜமால் இந்தோனிசியா சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த மே 25-ஆம் தேதி சிகிச்சை பெற்று வந்த அம்பாங் புத்திரி மருத்துவமனையில் இருந்து ஜமால் தலைமறைவானார்.

அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஜமால், மூசா இருவரும் நாட்டை விட்டு வெளியேறியதற்கான தடயம் எதுவுமில்லை என குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.