Home நாடு நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்

நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்

900
0
SHARE
Ad
நோர் ஷம்சியா முகமட் யூனுஸ்

கோலாலம்பூர் – கடந்த 15 நவம்பர் 2016-ஆம் தேதியோடு மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் துணை ஆளுநர் என்ற பதவியிலிருந்து விலக்கப்பட்டவர் டத்தோ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ். அதற்குக் காரணம் 1எம்டிபி பணவிவகாரங்கள் குறித்தும், அதன் தொடர்பிலான பணம் எவ்வாறு வங்கிகளை ஊடுருவியது என்பது குறித்தும் புலனாய்வுகளை மேற்கொண்ட காரணத்தால் அவர் அந்தப் பதவியிலிருந்து அப்போதைய பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், காலச் சுழற்சி அவரை மீண்டும் அதே பேங்க் நெகாராவின் ஆளுநர் (கவர்னர்) பதவிக்குக் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறது. அவரது நியமனம் உறுதியாகியிருப்பதாக புளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

30 ஆண்டுகாலமாக பேங்க் நெகாராவில் பணியாற்றிய பின்னர் துணை ஆளுநர் பதவியிலிருந்து விலகிய நோர் ஷம்சியா அதன் பின்னர் அனைத்துலக நிதிவாரியத்தில் (International Monetary Fund -IMF) கடந்த ஆண்டு ஏப்ரலில் இணைந்தார்.

#TamilSchoolmychoice

அங்கு பணியாற்றிவந்த அவர் தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகி விட்டார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி பேங்க் நெகாரா ஆளுநர் பதவியிலிருந்து விலகிய டான்ஸ்ரீ முகமட் இப்ராகிமுக்குப் பதிலாக பொறுப்பேற்கிறார்.

மத்திய அரசாங்கத்தின் நிலம் ஒன்றை 2 பில்லியன் ரிங்கிட்டிற்கு பேங்க் நெகாரா வாங்கியது மற்றும் அந்தப் பணத்தைக் கொண்டு 1எம்டிபியின் கடன்கள் செலுத்தப்பட்டது குறித்த விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து முகமட் இப்ராகிம் பதவி விலகினார்.