Home நாடு நஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன!

நஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன!

1069
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கு, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கான பெரும் நிதிக் கையாடல் தொடர்பானதாக இருக்கப் போகிறது என்பது ஒருபுறமிருக்க, நீதித் துறை காணாத சட்டப் போராட்டங்கள் இருதரப்பு வழக்கறிஞர்களாலும் அணிவகுக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நஜிப்புக்கு எதிரான வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தலைமையேற்கிறார். அவருக்கு 11 அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் துணையாகச் செயல்படுகின்றனர்.

நஜிப்பைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் குழுவுக்கு டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தலைமையேற்கிறார். அவருக்கு உதவியாக 5 வழக்கறிஞர்கள் செயல்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சார்பில் கண்காணிப்பு வழக்கறிஞராக (watching brief) செயல்பட பினாங்கு வழக்கறிஞர் டத்தோ கே.குமரேந்திரன் விண்ணப்பித்துள்ளார்.

கண்காணிப்பு வழக்கறிஞராகச் செயல்படுபவர் வழக்கில் நேரடியாகப் பங்கெடுக்க முடியாது.

பொதுவாக வழக்கில் யாராவது ஒருவரின் பெயர் சம்பந்தப்படுத்தப்படும் என்றால் அவரது சார்பாக அந்நபர் தனக்கென ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம். நஜிப் வழக்கில் அவரது துணைவியார் ரோஸ்மாவின் பெயர் பெருமளவில் அடிபடுகிறது.

எனவே, ரோஸ்மாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக வழக்கு விசாரணைகள் நடந்தால் அதுகுறித்து மட்டும் கண்காணிப்பு வழக்கறிஞர் குமரேந்திரன் ஆட்சேபம் தெரிவிக்கவோ, கருத்து கூறவோ, விளக்கங்கள் வழங்கவோ முடியும். மற்றபடி மைய வழக்கில் வாதாடவோ, ஈடுபடவோ முடியாது.

இத்தகைய விண்ணப்பத்தை நீதிமன்றம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே அந்த வழக்கறிஞர் கண்காணிப்பு வழக்கறிஞராகச் செயல்பட முடியும்.