Home நாடு மாசாய் தமிழ்ப் பள்ளி – அனைத்துல அரங்கில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா?

மாசாய் தமிழ்ப் பள்ளி – அனைத்துல அரங்கில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா?

847
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 13) தொடங்கி கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக தமிழ்ப் பள்ளி ஒன்று மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்கிறது.

ஜோகூர் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளிதான் அது!

இந்த அனைத்துலக அறிவியல் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்ளப் போகும் பள்ளி எது என்பதை நிர்ணயிக்க கடந்த ஜூன் 29, 30-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளில் 8 பள்ளிகள் போட்டியிட்டன. அதில் மாசாய் தமிழ்ப் பள்ளி முதலாவதாகத் தேர்வு பெற்று தமிழ்ப் பள்ளிகளின் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்வுப் போட்டியில் இரண்டாவது பரிசை வென்று அனைத்துலக அறிவியல் போட்டிக்குத் தேர்வு பெற்ற மற்றொரு பள்ளி தேசியவகை ஸ்ரீ பெட்டாலிங் பள்ளியாகும் (SK Sri Petaling).

மொத்தம் 7 நாடுகள் இந்த அனைத்துலக நாடகப் போட்டியில் பங்கு பெறுகின்றன. மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், சீனா, புருணை, தாய்லாந்து, நைஜீரியா ஆகியவையே அந்த 7 நாடுகளாகும்.

இந்தப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் மாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக அளவிலும் வெற்றி பெற்று மலேசியாவுக்குப் பெருமை சேர்க்குமா – தமிழ்ப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை நிரூபிக்குமா – என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடத்திலும், தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களிடத்திலும் எழுந்துள்ளது.

கடந்த மே மாத இறுதியில் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் இரண்டு விருதுகளை மாசாய் தமிழ்ப் பள்ளி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.