Home நாடு நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார்

நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார்

2457
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை பிற்பகலில் இங்குள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நீர்வளம், நிலம், மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் (படம்) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எஸ்.பி.எம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற நேசா உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு நிதியை நேசா கூட்டுறவுக் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது. நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக இருந்த டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியிலும், சிந்தனையிலும் பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கல்வி ஊக்குவிப்பு நிதித் திட்டம் தொடங்கப்பட்டு நேசா கூட்டுறவுக் கழகம் அத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

சேவியர் ஜெயகுமாருடன் நேசா வாரிய உறுப்பினர்கள்

நேசா கூட்டுறவுக் கழகத்தின் துணைப் பொது நிர்வாகி கே.ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றியதோடு, அறிவிப்பாளராகவும் இருந்து நிகழ்ச்சியை வழி நடத்தினார்.

#TamilSchoolmychoice

தலைமையுரையாற்றிய நேசா இயக்குநர் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் டாக்டர் அ.இலட்சுமணன், பல்வேறு பணிகளுக்கு இடையில் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்து சிறப்பித்திருக்கும் சேவியர் ஜெயகுமாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தான் மருத்துவருக்குப் படித்த காலத்தில் ஏழ்மையான சூழலில் தனது குடும்பத்தினர் குறிப்பாகத் தனது தாயார் பட்ட கஷ்டங்களைத் தனதுரையில் விவரித்த டாக்டர் இலட்சுமணன் இப்போது மாணவர்கள் அப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நேசா இந்த கல்வி ஊக்குவிப்பு நிதியை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

தலைமையுரையாற்றும் நேசா இயக்குநர் வாரிய இடைக்காலத் தலைவர் டாக்டர் அ.இலட்சுமணன்

இந்த நிகழ்ச்சியில் நேசா இயக்குநர் வாரிய உறுப்பினர்களும், நேசா இயக்குநர் வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.இராஜண்ணனும் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியை நேசா சார்பாக வழங்கிய சேவியர் ஜெயகுமார், தனது சிறப்புரையில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சிறந்த முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், நன்றாகத் தேர்ச்சி பெற முடியாமல் கல்வியைப் பாதியிலேயே முடித்து விட்டு வெளியேறும் நிலைமைக்கு ஆளாகும் மாணவர்கள் குறித்தும் நேசா போன்ற இயக்கங்கள் யோசிக்க வேண்டும் – அவர்களுக்கும் உதவும் வழிவகைகளை ஆராய வேண்டும் – என சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

சேவியருக்கு சிறப்பு செய்யப்படுகிறது
நேசா இயக்குநர் வாரிய முன்னாள் உறுப்பினர் கந்தசாமி எழுதிய மலாய்-தமிழ் மொழி சொல் தொடர்பு குறித்த நூல் சேவியருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

அடுத்து:

நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார் உரை:

  • மிட்லண்ட் மாணவர் தங்கும் விடுதியை அடுத்து கோல லங்காட் தொகுதியிலும் மாணவர் தங்கும் விடுதியைக் கட்டுவோம்.
  • தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவ இந்திய சமுதாயம் முன்வர வேண்டும்.