Home உலகம் வங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை

வங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை

861
0
SHARE
Ad

டாக்கா: வங்காளதேசத்தில், கடந்த 2004ம் ஆண்டில் கையெறி குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாரிக் தற்போது இலண்டனின் தங்கியிருக்கிறார். அவர் நேரடியாக நீதிமன்றத்தில் இல்லாத சூழலில் இந்த வழக்கு நடைபெற்றது. கையெறி குண்டு தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் தாரிக் ரஹ்மானுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது பிரதமராக இருக்கும் ஷேக் ஹசினா 2004-இல் நடத்திய அரசியல் கூட்டத்தில் இந்த கையெறி குண்டு வீசிய சம்பவம் நடந்தேறியது. இந்த சம்பவத்தில் 24 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடத்தப்பட்டு வந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேர்களில் 2 முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர்.

இந்த வழக்கில் மேலும் 18 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.11 பேருக்கு ஆறுமாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

73 வயதான முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அண்மையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நடப்பு பிரதமர் ஷேக் ஹசினா எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.