Home நாடு பண்டான் பிகேஆர் தொகுதி தலைவராக ரபிசி வெற்றி!

பண்டான் பிகேஆர் தொகுதி தலைவராக ரபிசி வெற்றி!

1338
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பண்டான் பிகேஆர் தொகுதிக்கான தேர்தலில் பிகேஆர் கட்சியின் நடப்பு உதவித் தலைவர் ரபிசி ரம்லி நான்கு முனைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

ரபிசி ரம்லி கட்சியின் துணைத் தலைவருக்கான போட்டியிலும் இறங்கியுள்ளார்.

ரபிசிக்கு 566 வாக்குகள் கிடைத்த வேளையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹனிசா முகமட் தல்ஹா 405 வாக்குகளும், நோர் ஹயாத்தி 353 வாக்குகளும் முகமட் ஷவுக்கி முகமட் ஹாஷிம் 71 வாக்குகளும் பெற்றனர். ரபிசியை எதிர்த்து நின்றவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் ரபிசிக்குக் கிடைத்த வாக்குகளை விட அதிகம் என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

#TamilSchoolmychoice

ரபிசி பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார். தற்போது வான் அசிசா பண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், துணைத் தலைவருக்கான போட்டியில் பண்டான் தொகுதியில் அஸ்மின் அலி ரபிசியை விடக் கூடுதலான வாக்குகள் பெற்று ரபிசி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பண்டான் தொகுதியில் ரபிசிக்கு 508 வாக்குகள் மட்டுமே கிடைத்த வேளையில் அஸ்மினுக்கு 715 வாக்குகள் கிடைத்தன.

ரபிசியின் சொந்தத் தொகுதியிலேயே அவர் தோல்வியடைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தான் அஸ்மினை விடக் குறைந்த வாக்குகள் பெற்றதற்கான காரணம், அஸ்மின் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் அம்பாங் தொகுதியில் இருந்து தனது (பண்டான்) தொகுதிக்கு உறுப்பிய மாற்றம் செய்யப்பட்டதுதான் என ரபிசி கூறியுள்ளார்.