Home நாடு பிகேஆர் தேர்தல் : சபாவில் ரபிசி ரம்லி தாக்கப்பட்டார்

பிகேஆர் தேர்தல் : சபாவில் ரபிசி ரம்லி தாக்கப்பட்டார்

1112
0
SHARE
Ad

கெனிங்காவ் (சபா) – பிகேஆர் கட்சித் தேர்தல்கள் இறுதிக் கட்டமாக இரண்டு நாட்களுக்கு சபா மாநிலத்தில் நடத்தப்படுகின்றன. நேற்று கெனிங்காவ் பிகேஆர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது அங்கு வாக்களிப்பு மையத்திற்கு வருகை தந்த ரபிசி ரம்லி மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லி இது குறித்து காவல் துறையில் புகார் ஒன்றை செய்திருக்கிறார்.

கெனிங்காவ் வாக்களிப்பு மையத்தில் இருதரப்புகளுக்கும் இடையில் கைகலப்பு மூண்டதாகவும் அதைத் தொடர்ந்து அங்கிருந்து பின்வாசல் வழியாகத் தான் வெளியேற முற்பட்டபோது, ஒரு நபர் பின்னால் இருந்து வந்து தனது தலையில் தாக்கியதாகவும், உடனே தன்னுடன் வந்தவர்கள் அந்நபரைத் தடுத்து விட்டதாகவும் ரபிசி தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கெனிங்காவ் தொகுதியில் தான் பெரும்பான்மை வாக்குகளில் வெல்ல முடியும் என்றும் கருத்துரைத்த ரபிசி, பல வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக, கெனிங்காவ் தொகுதியின் வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்றில் நேற்று சபாவில் சில தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெற்ற வேளையில், இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வாக்களிப்பு நடைபெறும்.

அடுத்த வாரம் இறுதி மாநிலமாக சரவாக்கில் வாக்களிப்பு நடைபெறும்.