Home நாடு ஜோ லோ : கடப்பிதழ்கள் இரத்து – நாடு நாடாக ஓடுகிறார்

ஜோ லோ : கடப்பிதழ்கள் இரத்து – நாடு நாடாக ஓடுகிறார்

910
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பில் தேடப்படும் ஜோ லோ எங்கிருக்கிறார் என்பது இதுவரையில் தெரியாத நிலையில், அவரது அனைத்துலகக் கடப்பிதழ்கள் ஒவ்வொன்றாக இரத்து செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அவர் நாடுவிட்டு நாடு என ஓடிக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அவரது மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ் கடந்த ஜூன் மாதம் இரத்து செய்யப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் என்ற சிறிய நாட்டின் சார்பில் அவர் வைத்திருந்த கடப்பிதழை அவர் பயன்படுத்தி வந்தார். தற்போது அந்தக் கடப்பிதழும் இரத்து செய்யப்பட்டது.

எனினும் அவர் இன்னும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளின் அனைத்துலகக் கடப்பிதழ்களைக் கைவசம் வைத்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த நாடுகளில் ஜோ லோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏராளமான சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் அவர் மீது அமெரிக்காவும் அண்மையில் குற்றப் பத்திரிக்கை சுமத்தியிருப்பதால் – மலேசியா உள்ளிட்ட பல நாடுகளால் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டிருப்பதால் – இனி அவர் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குச் செல்வது என்பது சிரமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜோ லோவின் தாத்தா தாய்லாந்தில் மிகப் பெரிய அளவில் இரும்பு, மதுபானத் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதால் தாய்லாந்திலும் ஜோ லோவுக்கு ஏராளமான சொத்துகளும், உறவினர்களும் இருப்பதாகவும், அவர் தாய்லாந்து கடப்பிதழ் ஒன்றை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஜோ லோ முகமாற்று அறுவைச் சிகிச்சை மூலம் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டும் உலவி வரலாம் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன.