Home நாடு அஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி

அஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி

1330
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சித் தேர்தல்களில், துணைத் தலைவருக்கான போட்டியில் ரபிசி ரம்லிக்கும், அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் – கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்று சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற வாக்களிப்புடன் பெரும்பான்மையான மாநிலங்களின் வாக்களிப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன. சரவாக் மாநிலத்தில் அஸ்மின் அலி ரபிசியை விட கூடுதல் வாக்குகள் பெற்று முந்துகிறார் என அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அதே சமயத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மறுதேர்தல்கள் நடத்தப்பட்ட சில தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ரபிசி 2,898 வாக்குகள் பெற்று அஸ்மினை விட 15 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சபா மாநிலத்தில் உள்ள பென்சியாங்கான் தொகுதியில் ரபிசி 2,388 வாக்குகள் பெற்ற நிலையில், அஸ்மின் வெறும் 262 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

மொத்த வாக்குகள் எண்ணப்பட்ட வகையில் அஸ்மின் இன்னும் ரபிசியை முந்துகிறார் என்றாலும், மறுதேர்தல்கள் நடைபெறவிருக்கும் சில தொகுதிகளின் முடிவுகள் ரபிசிக்கு சாதகமாக அமைந்து, போட்டியின் இறுதி முடிவு அவருக்கு சாதகமாக அமையக் கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இதற்கிடையில், பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எந்த வகையிலும் தான் தலையிடவில்லை என்றும் கட்சித் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு முழுக்க முழுக்க தேர்தல் நடவடிக்கைக் குழுவைச் சார்ந்தது என்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.