Home நாடு சீ பீல்ட் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூருக்கு மகாதீர் உத்தரவு

சீ பீல்ட் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூருக்கு மகாதீர் உத்தரவு

2181
0
SHARE
Ad

சுபாங் – சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தொடர்ந்து தற்போது இருக்கும் நிலத்திலேயே நிலைநிறுத்தப்பட விரைவில் தீர்வு காணப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

அனைத்துத் தரப்பு இந்திய சமுதாயத்தினரும், ஆலய நிர்வாகத்தினர், வட்டாரப் பொதுமக்கள், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்கள் என அனைவரும் இணைந்து நடத்திய போராட்டம் வெற்றி முகட்டைத் தொட்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் துன் மகாதீர் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக, ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தைக் கையகப்படுத்தவும், அதே இடத்தில் ஆலயத்தை நிலைநிறுத்தவும் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

குலசேகரனும், வேதமூர்த்தியும் சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை தந்தபோது…
#TamilSchoolmychoice

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27) சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை தந்த பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியும், மனிதவள அமைச்சர் குலசேகரனும் அதற்குப் பின்னர் துன் மகாதீரைச் சந்தித்து நிலைமையை விளக்கிய பின்னர், பிரதமர் நிலத்தைக் கையகப்படுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

நிலத்தைக் கையகப்படுத்துவதிலும் (acquiring) ஆலயத்தை அங்கேயே நிலை நிறுத்துவதிலும், அரசாங்கத்திற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதனைப் பின்னர் செய்து கொள்ளலாம் என்றும், இருப்பினும் தற்போதைக்கு முதல் கட்டமாக அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மேம்பாட்டாளரிடமிருந்து கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலத்தைக் கையகப்படுத்துவது என்னும்போது, மாநில அரசாங்கம் மட்டுமின்றி, மத்திய அரசாங்கமும் அதனைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மத்திய அரசாங்கமே நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டு, பின்னர் அதனை சிலாங்கூர் அரசாங்கம் வசம் ஒப்படைப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.

நேற்று புதன்கிழமை (நவம்பர் 28) சிலாங்கூர் மந்திரி பெசாரை அவரது அலுவலகத்தில் சந்தித்த வேதமூர்த்தி பிரதமரின் முடிவுகளை மந்திரி பெசாரிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி விடுத்த அறிக்கை ஒன்றில், வேதமூர்த்தி, புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.சிவராசா, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோருடன் சிலாங்கூர் மாநில அரசு தலைமையகத்தில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியதாகத் தெரிவித்தார்.