Home நாடு மலேசியாவில் முதலாவது அனைத்துலக பள்ளி உளவியல் மாநாடு

மலேசியாவில் முதலாவது அனைத்துலக பள்ளி உளவியல் மாநாடு

1695
0
SHARE
Ad
உளவியல் மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் – முல்லை இராமையா, ரஹீம், டான்ஸ்ரீ மாரிமுத்து, த.கணேசன்…

கோலாலம்பூர் – மலேசியப் பள்ளி உளவியல் சங்கமும் ஒய்.எஸ். எஸ் எனப்படும் சமூக வியூக அறவாரியமும் இணைந்து நடத்தும் “முதலாவது அனைத்துலக பள்ளி உளவியல் மாநாடு” அடுத்தாண்டு ஜனவரி 10 மற்றும் 11ஆகிய தேதிகளில் கோலாலம்பூர், கிராண்ட் சீசன் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரியா, இந்தியா, இலங்கை, சீனா, வங்காளதேசம், மலேசியா மற்றும் இதர ஆசிய நாடுகளைச் சேர்ந்த உளவியல், சமூகவியல் மற்றும் கல்வித் துறைச் சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்வதோடு ஆய்வுக் கட்டுரைகளையும் படைக்கவுள்ளனர்.

“ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் ஊக்குவிப்பு: பள்ளி மாணவர்களின் உளவியல், சமூகம், பண்பாட்டு சார்ந்த பார்வை” எனும் கருப்பொருளைக் கொண்ட இம்மாநாட்டில் மனநலம்,  மேற்கத்திய மற்றும் கிழக்கத்தியப் பார்வையில் பள்ளி உளவியல்,  பாதிப்பின் விளிம்பில் உள்ள மாணவர்களை அடையாளம் காணுதல், மாணவர்களின் கற்றல் குறைபாடு என 15-க்கும் மேற்பட்ட துணைத் தலைப்புக்களில் மாநாட்டின் அங்கங்களும் நடவடிக்கைகளும் அமைய விருக்கின்றன.

#TamilSchoolmychoice

பள்ளி உளவியல் அணுகுமுறைகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை  மையமாகக் கொண்டதாகும். ஆங்கில மொழியில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த முதுகலை மற்றும் பி.எச்.டி மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆகியோருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக இம்மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுச் செயலாளரும் சமூக வியூக அறவாரியத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியுமான  கணேசன் தங்கவேலு தகவல் ஊடகங்களுக்கு வெளியிட்ட  செய்தியில் கூறியுள்ளார்.

இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகச்  சபா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் பாலன் இராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். ஆலோசகராக டான்ஸ்ரீ டாக்டர். த. மாரிமுத்து, மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் பிரிவுத் தலைவராக மலேசியத் தேசியப் பல்கலைக்கழக குற்றவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் முகமது ரஹிம் கமாலுடீன், இணைச் செயலாளராக திரு. அருணகிரி சுப்பிரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இம்மாநாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பேராளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கட்டுரைகள் படைக்கவிரும்புகிறவர்களும் மாநாட்டில் பங்கேற்க விரும்புகிறவர்களும் 03-40415958 என்ற அலுவலகத் தொலைப்பேசி எண் மற்றும் maspaa2016@gmail.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கும் பதிவுக்கும்  www.yss.my என்ற இணையப் பக்கத்தை நாடுங்கள்.